Tuesday 30 August 2011

திருக்குன்றக்குடி 4

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி



சின்னமருது சேர்வைக்காரர்
பெரியமருது சேர்வைக்காரர்
நித்திய சதா சேவை



                    பல இடங்களில் திருப்பணிகள் பலவற்றை மருது சேர்வைக்காரர்கள் செய்தனர்.
                    கிழக்கிந்தியக் கும்பினியாரிடம் பெரிய மருது பிடிபட்ட பின்னர் அவரையும் அவருடைய உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் தூக்கிலிட்டனர். திருப்புத்தூர் கோட்டையின் தென்மேற்குக் கொத்தளத்தின் மீது தென்னை மரங்களை வெட்டிப்போட்டு தூக்குமரத்தை நிறுவி அதில் வரிசையாகத் தூக்கிலிட்டனர்.
                    இதனை Common Gibbet என்பார்கள். தனித்தனியாக தூக்கிலிடுவதில் கௌரவம் இருக்கும் என்றும் ஒரே குறுக்கு மரத்தில் வரிசையாகத் தோரணம் கட்டினாற்போல தூக்கிலிட்டுத் தொங்கவிடுவது அவமானப்படுத்துவது போலாகும் என்ற மரபு அக்காலத்தில் இருந்தது.
                    இறக்கும் முன்னர் பெரிய மருது சேர்வைக்காரர், தாம் நிறுவிய தர்மங்களும் அறப்பணிகளும் திருப்பணிகளும் மானியங்களும் உரிமைகளும் காக்கப்படவேண்டும்; என்றென்றும் இருக்கவேண்டும் என்று உறுதி வாங்கிக்கொண்டார்.
                    'முள்ளால் கீறிய கீறலும், சொல்லால் சொன்ன சொல்லும், கல்லால் வெட்டிய கல்லும்' பாதுகாக்கப்படவேண்டும் என்று சொன்னார்.
                    அதன்படியே பாதுகாக்கப்பட்டன.
                    அவர்கள் ஆலயங்களில் செய்த திருப்பணிகளில் குறிப்பிடக் கூடியவை சில உண்டு.   
                    சருகணி ஆரோக்கிய மாதா கோயிலுக்கு வெள்ளி ரதம் ஒன்றை அவர்கள் செய்து கொடுத்துள்ளனர். பெரிய மருதுவின் மகள் வழியினர் அந்த தேரின் வடத்தை முதலில் பிடிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.
                    குன்றக்குடி கோயில் திருப்பணியைப் பற்றி கூறினேன்.
                    இன்னும் நான்கு புராதனமான கோயில்களுக்கும் அவர்கள்  சீரமைப்புச் செய்தனர்.    

                    பிரான்மலை, திருக்கோளக்குடி, திருப்புத்தூர், மட்டியூர் ஆகியவை அந்தக் கோயில்கள். இவற்றில் பிரான்மலை, திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி ஆகியவை குடைவரைக் கோயில்களைக் கொண்டவை. பிரான்மலையும் திருப்புத்தூரும் திருக்கோளக்குடியும் தேவார தலங்கள். பிரான்மலையும் குன்றக்குடியும் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பெற்றவை.    
                    இவற்றை நன்கு பாதுக்காக்கவேண்டும் என்று மருது சேர்வைக்காரர் எண்ணம் கொண்டார்.

                    திருவண்ணாமலையில் ஓர் ஆதீனம் இருந்தது. அது தெய்வசிகாமணி தேசிகர் என்பவரால் நிறுவப்பட்ட சைவ சித்தாந்த மடம். அதனை 'திருவண்ணாமலை ஆதீனம்' என்றே அழைத்தனர். இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் முன்பாக அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் அந்த ஆதீனகர்த்தரும் அவருடைய உடன்கூட்டத்தினரும் இடம் பெயர்ந்து பாண்டியநாட்டுக்கு வந்துவிட்டனர்.

                    திருக்கொடுங்குன்றமாகிய பிரான்மலை ஒரு பாடல் பெற்ற தலமாக இருப்பதாலும் அது மிகவும் பாதுகாப்பான இடமாகத் தோன்றியதாலும் அங்கு ஆதரவு கிடைக்கும் என்பதாலும் அங்கே தம்முடைய மடத்தை அன்றைய திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் நிறுவிக்கொண்டார்.
                    பாண்டியர்கள், விஜயநகரத்தார் ஆட்சிக் காலங்களில் பாண்டிநாட்டு ஈசான்ய மடாதிபதிகளாகிய கோளகி வம்சத்து லக்ஷ¡த்யாயி சந்தானத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்களின் அருளாட்சியில் பிரான்மலை என்னும் திருக்கொடுங்குன்றம் கோயில் விளங்கியது.

                    மருது சேர்வைகள் தங்களுடைய ஆட்சியின்போது பெரும் பெரும் திருப்பணிகளையும் அறக்கட்டளைகளையும் பாதுகாத்து மேற்பார்வையிட வேண்டும் என்பதற்காக பிரான்மலை, திருப்புத்தூர், திருக்கோளக்குடி, மட்டியூர், குன்றக்குடி ஆகிய கோயில்களை ஒருங்கிணைத்து 'ஐந்து கோயில் தேவஸ்தானம்' என்ற அமைப்பை  உருவாக்கினர்.

                    அந்த அமைப்பின் தலையகத்தை முதலில்  பிரான்மலையில் இருக்கச்செய்து அந்த அமைப்பையும் திருவண்ணாமலை ஆதீனகர்த்தரின் பொறுப்பில் மருது சேர்வைக்காரர்கள் விட்டனர். பின்னர் குன்றக்குடியில் அந்த தேவஸ்தானம் நிறுவப்பட்டது.

                    இன்றளவும் ஐந்து கோயில் தேவஸ்தானம் திருவண்ணாமலை ஆதீனத்தின் பொறுப்பில் இருந்து வருகிறது.
                    திருவண்ணாமலை ஆதீனம் என்பது அதிகாரபூர்வமான பெயர் என்றாலும்கூட அது குன்றக்குடியிலிருப்பதால் 'குன்றக்குடி மடம்' என்றுதான் வழங்கப்படுகிறது.

                    திருவண்ணாமலை ஆதீனகர்த்தர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டத்திலிருந்த தெய்வசிகாமணி தேசிகர். அவரை அனைவருமே 'குன்றக்குடி அடிகளார்' என்று அழைத்தனர். அந்தப் பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது. பின்னர் அதையும் சுருக்கி 'அடிகளார்' என்று மட்டுமே அழைக்கலாயினர். 'அடிகளார்' என்றால் அவர் திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் குன்றக்குடி மடாதிபதியாகிய தெய்வசிகாமணி தேசிகர்தான் என்ற நிலைமை அன்று விளங்கியது.
                    சிலர் பெயராலும் பட்டத்தாலும் சிறப்புப் பெறுவார்கள். சிலர் பட்டத்துக்கும் பெயருக்கும் சிறப்புச் சேர்ப்பார்கள். அவ்வகையில் உள்ளவர்.
                    பெரியார் என்றால் ஈவேரா; பெரியவர்கள் என்றால் காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் என்று கொள்கிறோம் அல்லவா.

                    சிறந்த தமிழறிஞர் என்பது மட்டுமல்லாமல் சமூக சிந்தனையாளராகவும் விளங்கினார். அவர் குன்றக்குடியை ஒரு மாடல் சிற்றூராக ஆக்கிக்காட்டியுள்ளார்.
                    அவருடைய மேற்பார்வையில் குன்றக்குடி பெருமளவுக்கு வளம்பெற்றது.

                    அதைப் பற்றி தனியாக எழுதவேண்டும்.

திருக்குன்றக்குடி 3

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி

 

குன்றக்குடி
ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஷண்முகநாத ஸ்வாமி
                    குன்றக்குடி மலையின் மேலுள்ள கோயில் ஷண்முகநாதப் பெருமானின் கோயில். வள்ளி தெய்வயானை சமேதரராக விளங்குகிறார் என்று சொன்னேன்.
                    குன்றக்குடி ஒரு தோற்றத்திற்கு மயிலைப் போல தோன்றும்.     ஆகவே அதற்கு 'மயூரகிரி' என்ற பெயரும் 'மயில் மலை' என்ற பெயரும் உண்டு என்றும் சொன்னேன்.   
                    மருது சேர்வைக்காரர்கள் குன்றக்குடியில் திருப்பணியைத் தொடங்கும்போது அந்தக் கோயில் சோபையே இல்லாமல் இருந்தது.

                    மலையின் மேலுள்ள கருவறையில் வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் ஷண்முகநாதப் பெருமானின் விக்கிரகத்தை எடுத்துப் பார்த்தபோது அட்டபந்தனம் சார்த்திய பள்ளத்தில் அந்த மூர்த்தத்துக்குரிய யந்திரம் புரண்டு கிடந்ததைக் கண்டனர்.
                    ஆற்றல் மிக்க தெய்வமாக விளங்கிய அந்த மூர்த்தத்தின் ஆற்றலைப் பங்கப்படுத்துவதற்காக யாரோ அந்த யந்திரத்தைப் புரட்டிப் போட்டிருந்தார்கள்.
                    அருணகிரிநாதர் வந்து பாடியபோது மிகச் சிறந்து விளங்கிய குன்றக்குடி, அவர் பாடிய சிறப்பால் தெய்வீக உருவும் திருவும் சேர்ந்து ஆற்றல் மிக்க ஸ்தலமாக விளங்கியிருக்கும்.
                    ஏதோ காரணத்தால் யாரோ மந்திர தந்திரங்களின்மூலம் ஊறு செய்திருந்தனர்.
                    இதெல்லாம் சாதாரணமாக அவ்வப்போது ஆங்காங்கு நடைபெறும் காரியம்தான்.
                    எல்லாக் கோளாறுகளையும் மருது சேர்வைகள் சரிபடுத்தினர்.

                    மிகவும் விரிவான முறையில் திருப்பணியை மருது சேர்வைக் காரர்கள் செய்தனர். மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. மலை மேல் ஏறுவதற்குரிய படிகள் மலைச்சரிவில் வெட்டப்பட்டன.
                    புதிய மண்டபங்கள் கட்டப்பட்டன.
                    மேற்கோயில் தக்க முறையில் செப்பனிடப்பட்டு பெரிய அளவில் விரிவாக்கப்பட்டு அழகு படுத்தப ்பட்டது. ஒரே நேரத்தில் பலர் அங்கு இருக்கமுடியும் வண்ணம் அது விளங்கியது.

                    கருவறையின் முன்னிலையில் இரு பெருந்தூண்கள் நிறுவினர். அந்தத் தூண்களில் ஒன்றில் பெரிய மருது சேர்வைக்காரரின் சிலையும் இன்னொன்றில் சின்ன மருது என்னும் மருது பாண்டியன் சேர்வைக்காரரின் சிலையும் விளங்கின. ஆள் உயரத்தைவிட - Larger than life-size சிலைகள்.
                    இருவரும் 'நித்திய சதா சேவை' என்னும் அமைப்பில் சண்முகநாதப் பெருமானை என்றும் தரிசித்து வணங்கிக்கொண்டிருக்கும் பாவனையில் அமைந்த சிலைகள்.
                    கும்பாபிஷேகம் செய்விக்க முடிவு செய்யப்பட்டபோது, அதற்காக சாந்துப் புலவரைக்கொண்டு ஒரு பிரபந்தத்தைப் பாடுவித்தார்கள்.

                    பண்டைய காலத்தில் பாண்டியநாடு இருந்த பொற்காலத்தைப் போன்றதொரு பொற்காலத்தை மீண்டும் உருவாக்கவேண்டும் என்ற பேரவா அவர்களுக்கு எப்போதும் இருந்துவந்தது.
                    பழந்தமிழ் மன்னர்கள் எப்படி ஈரமும் வீரமும் ஈகையும் கொண்டு விளங்கினரோ அதேபோல இவர்களும் விளங்க நினைத்தனர்.
                    பழைய சுதேசி மன்னர்களைக் கொண்டு அந்தப் பொற்காலத்தை கொண்டுவர நினத்த சின்னமருது சேர்வை, மதுரை நாயக்கர்களின் கடைசி அரசியாகிய ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகனும் ஆற்காட்டு நவாபிடம் மதுரை அரசைப் பறிகொடுத்திருந்தவரும் ஆகிய விஜயகுமார திருமலை நாயக்கருக்கு அடைக்கலம் கொடுத்து 'வெள்ளிக்குரிச்சி' என்னும் ஊரில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
                    மருதிருவரின் ஆஸ்தானத்தில் இருபத்தேழு புலவர்கள் இருந்தனர்.

                    அவர்களில் முக்கியமானவர் சாந்துப்புலவர் என்னும் இளவயது மேதை.
                    சாந்துப் புலவர் ஒரே நாளில் 'மயூரகிரிக் கோவை' என்னும் நானூறு பாடல்கள் கொண்ட பிரபந்தத்தை பாடினார். மலையின் மீது ஏற ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள தோகையடி விநாயகர் சன்னிதியில் அது பாடப்பட்டு அரங்கேற்றம் பெற்றது. அதற்காக சிறப்பு மானியத்தையும் சேர்வைக்காரர்கள் வழங்கினர்.

                    பல ஊர்களை அவர்கள் சீரமைத்துள்ளனர். மிக அழகிய சிற்றூர்களை செப்பமாக மருது பாண்டியர் அமைத்திருந்தார்.

                    அவற்றில் ஒன்று, 'அரண்மனைச் சிறுவயல்' என்னும் ஊர். அதன் அமைப்பை மருது பாண்டியரைக் காணவந்த கிழக்கிந்தியக் கும்பினி கர்னல் வெல்ஷ் தம்முடைய 'Military Reminiscences' என்னும் நூலில் மிகவும்  சிலாகித்துப் பாராட்டி எழுதியுள்ளார்.

                    பெரிய மருது சேர்வைக்காரர் ஆட்சிக்குரியவராகக் கருதப்பட்டார். ஆனால் சின்ன மருது பாண்டியர்தான் சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்தையெல்லாம் கவனித்துக் கொண்டவர். பெரிய மருது சேர்வைக்குத் தெரியாமலேயே பாஞ்சாலங்குரிச்சியின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கியதும் அவர்தான்.    
                    அவருடைய அரண்மனை, அரண்மனை சிறுவயலில் இருந்தது. அதனையே தம்முடைய தலைமையகமாக மருது பாண்டியர் கொண்டிருந்தார்.

                    மருதிருவரின் கோட்பாடுகளின்படி குன்றக்குடியையும் பெரிதும் சீரமைத்தனர்.
                    வீதிகள் செவ்வையாக நாற்சதுரமாக அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முனங்கிலுமிருந்து நான்கு திக்குகளிலும் வெளியூர் செல்லும் சாலைகள் இணையுமாறு அமைத்தார்கள். ஊருக்கு நடுவிலேயே சோலைகள் இருந்தன.

                    தடாகங்களைச் செப்பனிட்டனர்.
                    தங்கள் பெயரால் ஒரு பெரிய குளத்தை வெட்டினர்.
                    'மருதாபுரி' என்னும் பெயரில் இன்றும் அது இருக்கிறது.
                    ஊருக்குள்ளும் ஊரைச் சுற்றியும் ஆயிரக்கணக்கில் தென்னை மரங்களை நடுவித்தனர். பல பழமரங்களும் நடப்பட்டன.

                    இவ்வாறு குன்றக்குடி மேன்மையும் சிறப்பும் பெற்று விளங்கியது.

திருக்குன்றக்குடி 2

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி


 குன்றக்குடி ஸ்ரீவல்லப கணபதி 
                    அப்போது சிவகங்கைச் சீமையில் மருது பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்திருந்த சமயம். 1780-ஆம் ஆண்டிற்கும் 1790-க்கும் இடைப்பட்ட காலம்.   
                    இந்த இடத்தில் ஒரு சிறிய விளக்கம்.......
                    விஜயநகரப் பேரரசு காலத்தில் ராயர் அட்மினிஸ்ட்ரேஷன் அந்தப் பேரரசை மண்டங்களாகவும் நாயக்கத் தானங்களாகவும் சீமைகளாகவும் பாளையங்களாகவும் நாடு, ஊர், கிராமம், பட்டி என்றும் வகுத்திருந்தது. 
                    மண்டலத்தை ஆள்பவர் மண்டலேசுவரர். இவர் கவர்னர் மாதிரி. இவருக்கு மேலே ஒருவர். அவர் மஹா மண்டலேசுவரர். அவருக்கும் மேலே ஒருவர். அவர்தான் ராயர். அவருக்கும் மேலே விரூபாக்ஷர் அல்லது திருப்பதி வேங்கடாசலபதி அல்லது ஹஸரா ராமர்.

                    மண்டலேசுவரருக்குக் கீழே நாயக்கர். அப்புறம் பாளையப்பட்டு அது இது..........

                    சிவகங்கைச் சீமை என்பது சேதுபதி மன்னரால் தம்முடைய மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கு சேதுநாட்டிலிருந்து பிரித்து மஞ்சள் காணியாகக் கொடுக்கப்பட்ட நாடு. நாலுகோட்டை மறவர் குடியைச் சேர்ந்த சசிவர்ணத் தேவரும் அவருடைய வாரிசுகளும் அதை ஆண்டுவந்தனர். அந்தக் குடியில் வந்த மன்னர் முத்துவடுகநாதர் பிரிட்டிஷ்காரர்களுடன் ஏற்பட்ட போரில் இறந்தார். அதன்பின்னர் சிவகங்கைச் சீமை பல குழப்பங்களுக்கு ஆளாகியது. பின்னர் மைசூர்ப் படையின் உதவியுடன் மறவர் படையைத் திரட்டிக்கொண்டு வந்து மருது சகோதரர்கள் சிவகங்கையைப் பிடித்துக்கொண்டனர். பழைய ராணி வேலு நாச்சியாரை மறுமணம்
செய்துகொண்ட பெரியமருது சேர்வைக்காரர் அவருடைய பிரதிநிதியாக - காரியத்துக் - நாட்டை ஆண்டுவந்தார். மருது சேர்வைக்காரர்கள் நாட்டைச் சிறந்த நிலைக்குக் கொண்டுவந்தனர்.
                    பெரிய மருது சேர்வைக்காரருக்கு ஒரு முறை முதுகில் ராஜபிளவை ஏற்பட்டது.

                    மிகவும் கஷ்டப்பட்டார். நாட்கள் அதிகமாக அதிகமாக நோயும் வேதனையும் அதிகரித்தன.
                    பிளவை என்பது Carbuncle எனப்படும் கட்டி. Carbuncle என்பது Abscess எனப்படும் கட்டிவகையிலேயே பெரியது. பல abscess கட்டிகள் ஒன்று சேர்ந்து கார்பங்க்கலாக விளங்கும். Infection-ஆல்தான் இந்த விவகாரங்களெல்லாம் ஏற்படும். அதில் எந்த மாதிரியான வகையறா கிருமி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து அந்தக் கட்டியின் Virulence எனப்படும் வீரியம் விளங்கும்.

                    ராஜபிளவை என்பது Multiple Carbuncle. கார்பங்க்கலிலேயே சிக்கலானது. Diabetes சம்பந்தம் பெரும்பாலுமிருக்கும்.

                    அவருடைய ஆஸ்தானப்புலவர் சாந்துப்புலவர். மிகவும் சிறு வயசு. முருகனின் திருவருள் பெற்றவர்.

                    அவர் ஒரு யோசனை சொன்னார்.

                    "யாராவது முருகனின் அடியார் ஒருவரைக் கூட்டிவரச் செய்து குன்றக்குடி முருகனை நினைத்து விபூதி போடச் செய்தால் நோய் நீங்கும். நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு குன்றக்குடி முருகன் குலதெய்வம். ஆகவே ஆட்களை அனுப்பி வெளியில் முதலில் தென்படும் முதல் செட்டியாரை அழைத்துவந்து பிளவையில் விபூதி போடச் செய்யுங்கள். சரியாகிவிடும்", என்றார்.

                    உடனேயே சேர்வைக்காரர் தம் ஆட்களை அனுப்பி, கண்ணில் தென்படும் முதல் செட்டியாரை அழைத்துவரும்படி சொன்னார்.

                    அவர்கள் சென்ற திக்கில் சிறிது தூரத்திலேயே காடப்ப செட்டியார் என்பவர் வியாபார நிமித்தமாக எதிர்த்தாற்போல வந்துகொண்டிருந்தார்.

                    சேவகர்கள் அவரை அப்படியே உடனேயே அழைத்துக்கொண்டு வந்தனர்.

                    பயந்துபோய் உடன் வந்த செட்டியாரிடம் சேர்வைக்காரர் விபரத்தைச் சொல்லி விபூதி போடச் சொன்னார்
                    அரண்டு போயிருந்த காடப்ப செட்டியார் வழக்கத்துக்கும் அதிகமாக, தேவைக்கும் அதிகமாகக் குன்றக்குடி முருகனை வேண்டிக்கொண்டு பிளவையில் திருநீறு இட்டார்.

                    அவர் அவ்வளவு ஆழமாக முருகனை வேண்டிக்கொள்வதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்தன.

                    அன்று இரவு சேர்வைக்காரர் தூங்கும்போது கனவுபோல ஒரு காட்சி தோன்றியது. கனவா நனவா என்ற இரண்டுமில்லாத நிலை. ஏதோ ஒருவகை அரிதுயில்............. Twilight Sleep-பில் Twilight Zone-னில் சஞ்சாரம்.

                    ஒரு இளம் துறவி கையில் மயில் இறகுடன் வந்து ராஜபிளவையை அமுக்கிவிட்டு, சலத்தையெல்லாம் பிதுக்கியெடுத்து, பிளவையின் வாய்ப்பாட்டில் திருநீறு வைத்து அழுத்திவிட்டு, மயில் இறகால் தடவிக் கொடுத்தது போன்ற காட்சி.
                    காலையில் எழுந்தவுடன் ராஜபிளவை உடைந்திருந்தது; வற்றியும் இருந்தது; வீக்கம் ஏதும் அறவேயில்லை; வலியும் கொஞ்சமும் இல்லை.

                    காடப்ப செட்டியாரை அழைத்து விபரத்தைச் சொல்லி அவருக்கு அவருடைய சொந்த ஊராகிய நேமம் என்னும் நியமத்தில் மானியங்கள்விட்டு, அவரைத் தம்முடைய 'அண்ணன்' என்று கொண்டாடி, அவ்வாறே அழைத்து எப்போதும் தம்முடன் இருக்கச் செய்துகொண்டார்.

                    சாந்துப்புலவரின் ஆலோசனைப்படி குன்றக்குடி கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ய விருப்பங்கொண்டார்.

திருக்குன்றக்குடி 1

பாகம் 1
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி


குன்றக்குடி

                    குன்றக்குடி என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள முருகன்   ஸ்தலங்களில் ஒன்று. திருப்புத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையின்மீது அது இருக்கிறது. மதுரையிலிருந்து 80 கீலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதன் மிக அருகில் - சுமார் ஐந்து கீலோமீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி இருக்கிறது. இந்த வட்டாரத்தில் மிகப்புராதனமான கோயில்களும் ஊர்களும் உண்டு.
                    குன்றக்குடி என்னும் பெயரால் விளங்கும் ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் குன்றக்குடி. குன்றக்குடி குன்றுக்கு 'மயில் மலை' என்றும் 'மயூரகிரி', 'சிகண்டிமலை'  என்றும் பெயர்கள் உண்டு.  சிகண்டி என்பது மயிலையும் குறிக்கும்.
                    அந்தக் குன்றின் உச்சியில் கோட்டை போன்ற அமைப்புடன் பாதுகாப்பாக விளங்குவது குன்றக்குடி ஸ்ரீஷண்முகநாதன் ஆலயம். வள்ளி தேவசேனா சமேதரராக ஆறுதிருமாமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் பெற்று விளங்கும் திருக்கோலத்தில் இறைவன் தம் திருத்தேவியர்களுடன் எழுந்தருளியிருக்கின்றனர்.
                    'தேனாறு' என்னும் ஆற்றால் வளம்பெற்ற புராதனமான ஊர்.

                    குன்றக்குடி மிகவும் தொன்மையானதோர் ஊர்.

                    பழங்காலத்தில் அது 'தேனாற்றுப் போக்கு திருகுன்றக்குடி' என்ற பெயர் பெற்றிருந்தது. குன்றக்குடி குன்றின் அடிவாரத்தில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது.
                    அந்த மலையின்மீது சமணர்களின் கற்படுக்கைகள் இருக்கின்றன. பிராம்மி எழுத்துக்களால் ஆன கல்வெட்டும் உண்டு. இவை சங்க காலத்தைச் சேர்ந்தவை.
                    குன்றின் அடிவாரத்தில் உள்ள குடைவரைக் கோயிலை தேனாற்றீசர் அல்லது தேனாற்றீஸ்வரர் கோயில் என்று அழைப்பார்கள். இதில் சில அழகிய சிற்பங்கள் உண்டு. இந்தக் கோயில் ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில். அதற்கும் முன்பே இங்கு சிவன் கோயில் இருந்திருக்கலாம்.

                    தேனாற்றீஸ்வரமுடைய நாயனார் என்று அக்கோயிலின் குடிகொண்டுள்ள சிவபெருமான் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறார். இப்போது அது நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமான கோயிலாக இருக்கிறது. அங்குதான் ஒரு மிகக் கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஜாதி வித்தியாசம் ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்று சொல்கிறார்கள். சொல்லளவில்மட்டும்தான். உண்மை நிலை?

                    'திருக்குன்றக்குடி' என்னும்போது அது பாடல்பெற்ற ஸ்தலமாகத்தான் இருக்கவேண்டும். பிற்காலத்தில் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
                    ஆனால் அதற்கும் முற்காலத்தில் அது ஏதாவது தேவாரம் பெற்ற ஸ்தலமாக இருந்திருக்கக்கூடும். 'திரு' என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

                    பாண்டிய நாடு முழுமைக்கும் பதினான்கே பதினான்கு பாடல் பெற்ற தலங்கள்மட்டும்தான் இருக்கின்றன என்பது சற்று யோசிக்கவேண்டிய விஷயம்.
                    தில்லையில் கூத்தனாக விளங்கும் தென்பாண்டிநாட்டான் அவ்வாறு விட்டிருப்பானா என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

                    பதினாறாயிரம், நாற்பதாயிரம் என்று பாடப்பட்ட தேவாரப் பாடல்களில் வெறும் மூவாயிரம், ஆயிரம் பாடல்கள் மட்டுமே எஞ்சின; மற்றவை அழிந்துவிட்டன என்று சொல்லப்பட்டிருப்பதையும் கருத்தில் வலுவாக இருத்திக் கொள்ளவேண்டும்.
                    பல ஸ்தலங்கள் பாடப்பட்டு அவற்றிற்குரிய பாடல்கள் மறைந்திருக்கலாம்.
                    நியமம் என்னும் நாட்டுப்பிரிவில் திருக்குன்றக்குடி இருந்தது. பழங்காலத்தில் ஒரு நாட்டை மண்டலம், வளநாடு, நாடு, ஊர், நகரம், பட்டினம், கிராமம் என்று பிரிவுகளாகவும் உட்பிரிவுகளாகவும் பிரித்திருந்தார்கள். நிர்வாகம், பாதுகாப்பு, வரிவிதிப்பு, நில அளவை போன்ற காரியங்களுக்காக அவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன.
                    குன்றக்குடி பாண்டிமண்டலத்திலுள்ள கேரளசிங்கவளநாட்டின் உட்பிரிவாகிய கான நாட்டிலுள்ள தேனாற்றுப்போக்கு-நியமம் நாட்டில் இருந்தது. நியமத்தை காங்கேயன் என்னும் சிற்றரசர் பரம்பரை ஆண்டுவந்தது. கங்கை நதிக்கரையிலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த காராளர் குடியைச் சேர்ந்தவர்கள் அந்த பரம்பரையினர்.
                    கேரளசிங்க வளநாடு, கான நாடு, கோனாடு முதலியவை அனைத்தும் இப்போது செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இருக்கின்றன. சிவகங்கைச் சீமை, புதுக்கோட்டைச் சீமை ஆகியவற்றில் செட்டிநாடு விளங்குகிறது. குன்றக்குடி சிவகங்கைச் சீமையைச் சேர்ந்ததுதான்.
                    நாட்டுப் பிரிவுகளும் அவற்றின் பெயர்களும் எல்லைகளும் பரப்பளவுகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
                    மிகவும் வளமுடன் இருந்துவந்த குன்றக்குடி இருநூற்றைம்பது  ஆண்டுகளுக்கு முன்னர் க்ஷ£ணித்த நிலையை அடைந்தது.
   
                    அதன் பின்னர் மருது சேர்வைக்காரர்களால் அது மிகவும் பசுமையும் வளமும் கொண்ட இடமாக மாறியது.
                    அதற்கு ஓர் உண்மையான வரலாற்றுக் கதையைச் சொல்ல வேண்டும்.

                    சொல்கிறேன்........

Wednesday 3 August 2011

தூசு தட்டப்படும் தா.கிருஷ்ணன் வழக்கு. கருணாநிதி விசாரிக்கப்படுவாரா?

கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாலையில் வாக்கிங் சென்ற தா.கிருட்டிணன், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். மு.க.அழகிரி உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது போலீஸ். தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கின் போக்கு திசை மாறியதால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியது அ.தி.மு.க. அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 13 நபர்களையும் நிரபராதிகளாக்கி, விடுதலை செய்தது சித்தூர் நீதிமன்றம். இதை எதிர்த்து தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்!’ என வாக்குறுதி கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ''தா.கி. வழக்கு மீண்டும் உயிர்பெறும்'' என்கிறார்கள் மதுரையில்! 

'உன்னை வீழ்த்தியவர்கள் இன்று தெய்வத்தின் தண்டனை​யால் வீழ்ந்துவிட்டார்கள். அம்மா ஆட்சியில் உண்மைக் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை உறுதி!’ என மதுரையில் அ.தி.மு.க. தொண்டர்கள், தா.கி-யின் புகைப்படத்துடன் மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்.
மே 20-ம் தேதி தா.கிருட்டிணனுக்கு எட்டாம் ஆண்டு நினைவு தினம். இதற்காக மதுரையில் அகமுடையார் இளைஞர் பேரவையினர் நடத்திய தா.கிருட்டிணன் படத் திறப்பு நிகழ்ச்சியிலும் அனல் பறந்தது.
மூவேந்தர் பண்பாட்டுக் கழகத் தலைவர் பரங்குன்றம், ''தா.கி. கொலை வழக்கை சரியானபடி நடத்தவில்லை. அதனால், எல்லோரும் விடுதலையாகிவிட்டார்கள். அப்படி என்றால், தா.கி-யை யார்தான் கொன்னது? நாவரசு கொலை வழக்கில் அப்பீலுக்குப் போன அரசு, தா.கி. கொலை வழக்கில் ஏன் அப்பீலுக்குப் போகவில்லை?'' என்றார் காட்டமாக.

தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, அவர் கொலையுண்டுகிடந்த இடத்தில் ஜூன் 10-ம் தேதி அகமுடையார் அமைப்புகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய அகமுடையார் இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் ஜெயமணி, ''விதி வலியதுன்னு சொல்வாங்க.
எட்டு வருஷத்துக்கு முந்தி இதே தேதியில்தான் தா.கி-யாரை வெட்டிக் கொன்றார்கள். இப்போது அதே தேதியில், கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைகளுக்கு. அது மாதிரி தா.கி-க்குக் கருணாநிதி செய்த கொடுமைக்கு, இப்போது அவர் மகள் கம்பி எண்ணுகிறார்!'' என்றார்.


தேவர் பொலிட் பீரோ உறுப்பினர் அரப்பா பேசுகையில், ''துக்கம் கேட்கக்கூட தா.கி. வீட்டுக்கு கருணாநிதி வரவில்லை. கொலையைக் கண்டித்தோ, இரங்கல் தெரிவித்தோ... பொதுக் குழுத் தீர்மானம்கூட போடவில்லை. அதனால்தான், தா.கி. கொலையின் பின்னணியில் கருணாநிதியும் இருக்கிறார் என்று சொல்கிறோம்.
அவருக்கு இந்தக் கொலையின் ரகசியங்கள் நன்றாகவே தெரியும். அதனால், போலீஸ் மறு விசாரணையை அவரிடம் இருந்து தொடங்க வேண்டும். இப்போது ஸ்பெக்ட்ரம் சதியில் கனிமொழி எப்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ, அதுபோல தா.கி. கொலை வழக்கில் கருணாநிதி மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும்!'' என்றார்.


இந்த வழக்குபற்றி பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு வரும்  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ''மகனைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார். இன்றைய தமிழக அரசு முறையீடு செய்தால், நீதிமன்றம், மறு விசாரணைக்கும் அப்பீலுக்கும் கட்டாயம் அனுமதி கொடுக்கும். இந்த வழக்கில் இருந்து விடுதலையான சிலர், அப்ரூவராக மாறத் தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது.
எனவே மறு விசாரணை நடத்தினால்,  அச்சுறுத்தலுக்குப் பயந்து பிறழ் சாட்சியம் அளித்தவர்கள், இப்போது மனசாட்சிப்படி உண்மையைச் சொல்வார்கள். இந்த வழக்கு அப்பீலுக்கு உகந்தது இல்லை என்று ஆந்திர அரசு வழக்கறிஞர் சொன்னதாகச் சொல்கிறார் கருணாநிதி. அவரிடம் யார், எப்போது கருத்துக் கேட்டார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நான் கேட்டதற்கு, கடைசி வரை கருணாநிதி அரசு பதில் சொல்லவே இல்லை!
மேலும் இந்த வழக்கில் தா.கி. எழுதிய கடிதங்கள் உள்பட முக்கியமான ஆவணங்களை போலீஸ் மறைத்துவிட்டது. தா.கி-யின் மனைவியை கடைசி வரை நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவைக்கவில்லை. தா.கி-யின் தம்பி ராமையா, இவர் மகன் நெடுஞ்செழியன் ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்ததன் ரகசியம் என்ன? தா.கி-யின் இன்னொரு தம்பிக்கு தி.மு.க. அரசில் முக்கியப் பதவி கொடுத்தது ஏன் என்பதையும் இன்றைய அரசு விசாரிக்க வேண்டும்!'' என்றார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடதடக்கப்போகிறது தா.கி. வழக்கு!

வரலாற்றைச் சொல் ! தலைமுறையை உருவாக்கு !!

மருது பாண்டியர் வீர வணக்கம்