Thursday 17 November 2011

Kurunila Mannan movie - Maruthupandiyar Song



இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. “மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.
முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை பொன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.
“பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். “அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.







சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.
சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி “என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.














முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். “எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ”அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். “சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். “சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். “அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.
cs_m
பழனியைப் போலவே மிருதங்கத்தின் தொப்பியை கையாள்வதில் முருகபூபதி தனக்கென்று ஓர் சிறந்த வழியை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தொப்பியில் வாசித்த முறையை, “his greatest contribution to mridangam playing”, என்கிறார் திருச்சி சங்கரன். சாதாரணமாக, மிக வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போது கும்காரங்கள் இடம் பெருவது அரிது. ஆனால், முருகபூபதியின் வாசிப்பிலே, வலந்தலையில் மின்னல்; வேக ஃபரன்கள் ஒலிக்கும் போதே, தொப்பியில் அவரது இடது கை கும்காரங்களை தன்னிச்சையாய் உதிர்ப்பதை, அவர் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் பொது அறிந்து கொள்ளல்லாம். பொதுவாக வலந்தலையில்தான் விரல்களை பிரித்து வாசிப்பர். தொப்பியில் வாசிக்கும் போது, பெரும்பாலான சொற்களில் விரல்கள் அனைத்தும் இணைந்தே இருக்கும். “வலந்தலையைப் போலவே தொப்பியிலும் வாசிப்பதை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில் அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது”, என்று முருகபூபதியே வானொலி நேர்காணலில் கூறியுள்ளார். “ஒரு வழைமையான சொல்லில், வலந்தலையில் இடம் பெறுவதை தொப்பியிலும், தொப்பியில் இடம் பெருவதை வலந்தலையிலும் மாற்றி வாசிப்பதும் அவர் தனிச் சிறப்பாகும்”, என்கிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். “அவர் வாசிக்கும் சொற்கட்டுகளை கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொண்டு விட முடியாது. அவர் விளக்கினால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்”, என்கிறார் சென்னை தியாகராஜன். “நான் கச்சேரியில் மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை வாசிப்பதைக் கேட்டு என் அண்ணாவிடம் சொல்வேன், அதை இவர் “இதைத்தான் செஞ்சு இருக்காங்க”, என்று விவரமாக விளக்குவார். அதை கிரகித்துக் கொண்டு, அப்படியே வாசிக்காமல், என் பாணியில் வாசிப்பேன். அது கேட்க புதிதாக ஒலிக்கும்”, என்று முருகபூபதியே விளக்குகிறார்.
அரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பல திறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். “சோமு என் தம்பி மாதிரி” என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்து அவர் கச்சேரிகளை சிறப்பித்துள்ளார். பின் நாளில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் கண்டவர் முருகபூபதி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர் (State Artiste, 1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கௌரவங்களே. சங்கீத விருதுகளில் தலையாயதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது அவருக்குக் கிடைக்காமல் போனதை, ‘a conspicuous omission’, என்று ஸ்ருதி இதழ் குறிப்பிடுகிறது.
1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டது. தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும் கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். சுய மரியாதையை எந்தக் காலத்திலும் இழந்து விடாதவர் என்று பெயர் பெற்றிருந்த இவர்., சம்பிரதாயாவுக்கு அளித்துள்ள நேர்காணலில், “என்னை கௌரவமாக நடத்துபவர்கள் கச்சேரியில் மட்டுமே நான் வாசிக்கிறேன். இப்போதெல்லாம் தனியை விட்டதும் இரண்டு விரலைக் காட்டி, இரண்டு நிமஷத்துக்குள் முடித்துவிடு என்று சமிக்ஞை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் வாசிக்க விரும்புவதில்லை.”, என்று தன் உள்ளத்தை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.
1980-களில் தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் பள்ளியில் விசிடிங் பிரின்சிபாலாக பணியாற்றியுள்ளார். அரசு இசைக் கல்லூரியின் அலோசகர் குழுவிலும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் நுண்கலை பிரிவிலும் (faculty of fine arts) பணியாற்றினார். “எப்போது போனாலும் தடையின்றி சொல்லிக் கொடுப்பார். தான் ஒரு மிருதங்கத்தை வைத்துக் கொண்டு, மாணவனுக்கு ஒரு மிருதங்கத்தை அளித்து தான் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் மாணவன் சரிவர வாசிக்கும் வரை விடாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். முருகபூபதியிடன் பயின்ற வித்வான்களுள் முக்கியமானவர் மறைந்த கஞ்சிரா மேதை ஹரிசங்கர். இவர் தவிர, மாவேலிக்கரை சங்கரன் குட்டி நாயர், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மதுரை செல்லப்பா, கும்பகோணம் ப்ரேம்குமார், சென்னை தியாகராஜன் போன்ற கலைஞர்கள் இவரிடம் பயின்றவர்களே.

1998-ல் தனது 84-வது வயதில் முருகபூபதி காலமானார். அதை ஒட்டி கே.எஸ்.காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரையில், “The last of titans”, என்று இவரை குறிப்பிடுகிறார். முருகபூபதி இருக்கும் போதே சங்கரசிவ பாகவதரின் வருடாந்தர அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முருகபூபதியின் மறைவுக்குப் பின் ‘சங்கர பூபதி ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் முயற்சியால் ஆண்டுதோறும் சங்கரசிவம், முருகபூபதி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்துவதோடல்லாமல் இசைத் துறையில் சாதித்தவர்களையும் கௌரவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவதசலத்தின் முயற்சியும், முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜின் உழைப்புமே முக்கிய காரணங்களாகும்.
முருகபூபதியின் மறைவை சில இணையதளங்கள் தவிர எந்த ஒரு மாநில பத்திரிகையோ, தேசிய பத்திரிகையோ குறிப்பிடக் கூட இல்லை என்று ஸ்ருதியில் காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரை அங்கலாய்த்தாலும், அவர் வாசிப்பை கேட்ட எண்ணற்ற ரசிகர்கள் மனதில் அவர் மிருதங்க நாதம் என்றென்றும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.

அகமுடைய முதலியார் :

கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குலத்தூர் , திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது. தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.
ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமுக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாலர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர். எனவே துலுவ வெள்ளாலர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமுகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமுகன்ங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமுகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர். முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
துலுவ வெள்ளாலர், துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கண்ணட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாலர் சமுகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்னாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்களை வட வடதமிழ்னாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்னாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

Saturday 12 November 2011

ரூ. 2 கோடி செலவில் திருமண மண்டபம்: அடிக்கல் நாட்டி பூமி பூஜை

ராமநாதபுரம், அக். 28: ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராம பஸ் நிறுத்தத்தில் ரூ. 2 கோடி மதிப்பில், அகமுடையார் சங்கம் சார்பில் மருதுபாண்டியர்கள் பெயரில் திருமணம்  மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பூமிபூஜை வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

 விழாவுக்கு, மாமன்னர் மருதுபாண்டியர் அறக்கட்டளையின் தலைவர் எம். வீராச்சாமி தலைமை வகித்தார்.

 அகமுடையார் சங்க மாவட்டச் செயலர் எம். வேல்முருகன், மாவட்டப் பொருளாளர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.ஆர்.எஸ். அய்யனார் வரவேற்றார்.

 சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாம்பன் என். ராஜாஜி மருதுபாண்டியர் படத்தை  திறந்துவைத்து, அடிக்கல் நாட்டி, பூமி பூஜைகளைச் செய்தார்.

 பின்னர், அறக்கட்டளைத் தலைவர் எம்.வீராச்சாமி தெரிவிக்கையில், ரூ. 2 கோடி  செலவில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இம்மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

 விழாவில் பட்டணம்காத்தான் ஊராட்சிமன்றத் தலைவர் சித்ராமருது, முன்னாள்  ஊராட்சிமன்றத் தலைவர் குப்புராம்ஜி,சங்க நகர் தலைவர் குருசாமி,டி.கே. ஜூவல்லர்ஸ் உரிமையாளர் டி.கிருஷ்ணசாமி, பாம்பன்,எஸ். பாலா,வி,கே. ரமேஷ்,  பாம்பன் எஸ். பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மருதுபாண்டியர் குருபூஜை விழா: தலைவர்கள் அஞ்சலி

மானாமதுரை, அக். 27: சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 புதியபார்வை ஆசிரியர் நடராஜன் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதுரை ஆதீனம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் என். சேதுராமன், முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராமலிங்கம், சுப.தங்கவேலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் மருது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
 பல்வேறு இடங்களிலிருந்து அகமுடையார் சமூகத்தினர் வேன், கார்களில் காளையார்கோயிலுக்கு வந்து மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸ் ஈடுபட்டிருந்தனர்.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அகமுடையார் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

ராமநாதபுரம், அக். 24: ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை கிராமத்திலிருக்கும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அகமுடையார் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
 ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் சங்கத் தலைவர் பாம்பன் என்.ராஜாஜி தலைமையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.ஆர்.எஸ். அய்யனார், மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் வீராச்சாமி, வாலாந்தரவை கிராமத் தலைவர் விஸ்வநாதன், தர்மா ஆகியோர் மருதுபாண்டியர்கள் 210வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 பின்னர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாம்பன் என்.ராஜாஜி கூறியதாவது:
 மருது சகோதரர்கள் நினைவு தின விழா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு
 விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை நினைவுகூரும் வகையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
 இம்மாதம் 27 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வேன்களில் சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம். மறுநாள் 28 ஆம் தேதி மருதுபாண்டியர்
 திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழாவும் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறது என்றார்.
 அப்போது அகமுடையார் சங்க மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

பரமக்குடியில் மருதுபாண்டியர் குருபூஜை

பரமக்குடி, அக். 27: மாமன்னர் மருதுபாண்டியர்களின் 210-வது குருபூஜை விழா பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 குருபூஜை விழாவை முன்னிட்டு சந்தைக்கடைத் தெருவில் எஸ்.ராமமூர்த்தி தலைமையிலும், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர், மருதுபாண்டியர் நகர் ஆகிய பகுதிகளில் சுபாஷ் சந்திரபோஸ், தடா கண்ணுச்சாமி ஆகியோர் தலைமையிலும் மருதுபாண்டியர் உருவம் பொறித்த அகமுடையர் நலச் சங்கக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினர்.
 பின்பு, மருதுபாண்டியர்களின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பரமக்குடி நகர் மற்றும் மருதுபாண்டியர் நகர், திருவள்ளுவர் நகர், மலையான் குடியிருப்பு, பர்மா காலனி, தெளிச்சாத்தநல்லூர், பாண்டிக் கண்மாய், எமனேஸ்வரம், அக்கரமேசி, இலந்தைக்குளம், கமுதக்குடி, வாகைக்குளம், கொழுவூர் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
 முன்னதாக, போலீஸôரின் தடை உத்தரவால், மருதுபாண்டியர்களின் குருபூஜைக்கு வழக்கமாக வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நகர் மற்றும் கிராமங்களில் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து போலீஸôரின் பலத்த பாதுகாப்புடன் அஞ்சலி செலுத்துவோரின் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.

Tuesday 30 August 2011

திருக்குன்றக்குடி 4

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி



சின்னமருது சேர்வைக்காரர்
பெரியமருது சேர்வைக்காரர்
நித்திய சதா சேவை



                    பல இடங்களில் திருப்பணிகள் பலவற்றை மருது சேர்வைக்காரர்கள் செய்தனர்.
                    கிழக்கிந்தியக் கும்பினியாரிடம் பெரிய மருது பிடிபட்ட பின்னர் அவரையும் அவருடைய உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் தூக்கிலிட்டனர். திருப்புத்தூர் கோட்டையின் தென்மேற்குக் கொத்தளத்தின் மீது தென்னை மரங்களை வெட்டிப்போட்டு தூக்குமரத்தை நிறுவி அதில் வரிசையாகத் தூக்கிலிட்டனர்.
                    இதனை Common Gibbet என்பார்கள். தனித்தனியாக தூக்கிலிடுவதில் கௌரவம் இருக்கும் என்றும் ஒரே குறுக்கு மரத்தில் வரிசையாகத் தோரணம் கட்டினாற்போல தூக்கிலிட்டுத் தொங்கவிடுவது அவமானப்படுத்துவது போலாகும் என்ற மரபு அக்காலத்தில் இருந்தது.
                    இறக்கும் முன்னர் பெரிய மருது சேர்வைக்காரர், தாம் நிறுவிய தர்மங்களும் அறப்பணிகளும் திருப்பணிகளும் மானியங்களும் உரிமைகளும் காக்கப்படவேண்டும்; என்றென்றும் இருக்கவேண்டும் என்று உறுதி வாங்கிக்கொண்டார்.
                    'முள்ளால் கீறிய கீறலும், சொல்லால் சொன்ன சொல்லும், கல்லால் வெட்டிய கல்லும்' பாதுகாக்கப்படவேண்டும் என்று சொன்னார்.
                    அதன்படியே பாதுகாக்கப்பட்டன.
                    அவர்கள் ஆலயங்களில் செய்த திருப்பணிகளில் குறிப்பிடக் கூடியவை சில உண்டு.   
                    சருகணி ஆரோக்கிய மாதா கோயிலுக்கு வெள்ளி ரதம் ஒன்றை அவர்கள் செய்து கொடுத்துள்ளனர். பெரிய மருதுவின் மகள் வழியினர் அந்த தேரின் வடத்தை முதலில் பிடிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.
                    குன்றக்குடி கோயில் திருப்பணியைப் பற்றி கூறினேன்.
                    இன்னும் நான்கு புராதனமான கோயில்களுக்கும் அவர்கள்  சீரமைப்புச் செய்தனர்.    

                    பிரான்மலை, திருக்கோளக்குடி, திருப்புத்தூர், மட்டியூர் ஆகியவை அந்தக் கோயில்கள். இவற்றில் பிரான்மலை, திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி ஆகியவை குடைவரைக் கோயில்களைக் கொண்டவை. பிரான்மலையும் திருப்புத்தூரும் திருக்கோளக்குடியும் தேவார தலங்கள். பிரான்மலையும் குன்றக்குடியும் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பெற்றவை.    
                    இவற்றை நன்கு பாதுக்காக்கவேண்டும் என்று மருது சேர்வைக்காரர் எண்ணம் கொண்டார்.

                    திருவண்ணாமலையில் ஓர் ஆதீனம் இருந்தது. அது தெய்வசிகாமணி தேசிகர் என்பவரால் நிறுவப்பட்ட சைவ சித்தாந்த மடம். அதனை 'திருவண்ணாமலை ஆதீனம்' என்றே அழைத்தனர். இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் முன்பாக அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் அந்த ஆதீனகர்த்தரும் அவருடைய உடன்கூட்டத்தினரும் இடம் பெயர்ந்து பாண்டியநாட்டுக்கு வந்துவிட்டனர்.

                    திருக்கொடுங்குன்றமாகிய பிரான்மலை ஒரு பாடல் பெற்ற தலமாக இருப்பதாலும் அது மிகவும் பாதுகாப்பான இடமாகத் தோன்றியதாலும் அங்கு ஆதரவு கிடைக்கும் என்பதாலும் அங்கே தம்முடைய மடத்தை அன்றைய திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் நிறுவிக்கொண்டார்.
                    பாண்டியர்கள், விஜயநகரத்தார் ஆட்சிக் காலங்களில் பாண்டிநாட்டு ஈசான்ய மடாதிபதிகளாகிய கோளகி வம்சத்து லக்ஷ¡த்யாயி சந்தானத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்களின் அருளாட்சியில் பிரான்மலை என்னும் திருக்கொடுங்குன்றம் கோயில் விளங்கியது.

                    மருது சேர்வைகள் தங்களுடைய ஆட்சியின்போது பெரும் பெரும் திருப்பணிகளையும் அறக்கட்டளைகளையும் பாதுகாத்து மேற்பார்வையிட வேண்டும் என்பதற்காக பிரான்மலை, திருப்புத்தூர், திருக்கோளக்குடி, மட்டியூர், குன்றக்குடி ஆகிய கோயில்களை ஒருங்கிணைத்து 'ஐந்து கோயில் தேவஸ்தானம்' என்ற அமைப்பை  உருவாக்கினர்.

                    அந்த அமைப்பின் தலையகத்தை முதலில்  பிரான்மலையில் இருக்கச்செய்து அந்த அமைப்பையும் திருவண்ணாமலை ஆதீனகர்த்தரின் பொறுப்பில் மருது சேர்வைக்காரர்கள் விட்டனர். பின்னர் குன்றக்குடியில் அந்த தேவஸ்தானம் நிறுவப்பட்டது.

                    இன்றளவும் ஐந்து கோயில் தேவஸ்தானம் திருவண்ணாமலை ஆதீனத்தின் பொறுப்பில் இருந்து வருகிறது.
                    திருவண்ணாமலை ஆதீனம் என்பது அதிகாரபூர்வமான பெயர் என்றாலும்கூட அது குன்றக்குடியிலிருப்பதால் 'குன்றக்குடி மடம்' என்றுதான் வழங்கப்படுகிறது.

                    திருவண்ணாமலை ஆதீனகர்த்தர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டத்திலிருந்த தெய்வசிகாமணி தேசிகர். அவரை அனைவருமே 'குன்றக்குடி அடிகளார்' என்று அழைத்தனர். அந்தப் பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது. பின்னர் அதையும் சுருக்கி 'அடிகளார்' என்று மட்டுமே அழைக்கலாயினர். 'அடிகளார்' என்றால் அவர் திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் குன்றக்குடி மடாதிபதியாகிய தெய்வசிகாமணி தேசிகர்தான் என்ற நிலைமை அன்று விளங்கியது.
                    சிலர் பெயராலும் பட்டத்தாலும் சிறப்புப் பெறுவார்கள். சிலர் பட்டத்துக்கும் பெயருக்கும் சிறப்புச் சேர்ப்பார்கள். அவ்வகையில் உள்ளவர்.
                    பெரியார் என்றால் ஈவேரா; பெரியவர்கள் என்றால் காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் என்று கொள்கிறோம் அல்லவா.

                    சிறந்த தமிழறிஞர் என்பது மட்டுமல்லாமல் சமூக சிந்தனையாளராகவும் விளங்கினார். அவர் குன்றக்குடியை ஒரு மாடல் சிற்றூராக ஆக்கிக்காட்டியுள்ளார்.
                    அவருடைய மேற்பார்வையில் குன்றக்குடி பெருமளவுக்கு வளம்பெற்றது.

                    அதைப் பற்றி தனியாக எழுதவேண்டும்.

திருக்குன்றக்குடி 3

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி

 

குன்றக்குடி
ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஷண்முகநாத ஸ்வாமி
                    குன்றக்குடி மலையின் மேலுள்ள கோயில் ஷண்முகநாதப் பெருமானின் கோயில். வள்ளி தெய்வயானை சமேதரராக விளங்குகிறார் என்று சொன்னேன்.
                    குன்றக்குடி ஒரு தோற்றத்திற்கு மயிலைப் போல தோன்றும்.     ஆகவே அதற்கு 'மயூரகிரி' என்ற பெயரும் 'மயில் மலை' என்ற பெயரும் உண்டு என்றும் சொன்னேன்.   
                    மருது சேர்வைக்காரர்கள் குன்றக்குடியில் திருப்பணியைத் தொடங்கும்போது அந்தக் கோயில் சோபையே இல்லாமல் இருந்தது.

                    மலையின் மேலுள்ள கருவறையில் வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் ஷண்முகநாதப் பெருமானின் விக்கிரகத்தை எடுத்துப் பார்த்தபோது அட்டபந்தனம் சார்த்திய பள்ளத்தில் அந்த மூர்த்தத்துக்குரிய யந்திரம் புரண்டு கிடந்ததைக் கண்டனர்.
                    ஆற்றல் மிக்க தெய்வமாக விளங்கிய அந்த மூர்த்தத்தின் ஆற்றலைப் பங்கப்படுத்துவதற்காக யாரோ அந்த யந்திரத்தைப் புரட்டிப் போட்டிருந்தார்கள்.
                    அருணகிரிநாதர் வந்து பாடியபோது மிகச் சிறந்து விளங்கிய குன்றக்குடி, அவர் பாடிய சிறப்பால் தெய்வீக உருவும் திருவும் சேர்ந்து ஆற்றல் மிக்க ஸ்தலமாக விளங்கியிருக்கும்.
                    ஏதோ காரணத்தால் யாரோ மந்திர தந்திரங்களின்மூலம் ஊறு செய்திருந்தனர்.
                    இதெல்லாம் சாதாரணமாக அவ்வப்போது ஆங்காங்கு நடைபெறும் காரியம்தான்.
                    எல்லாக் கோளாறுகளையும் மருது சேர்வைகள் சரிபடுத்தினர்.

                    மிகவும் விரிவான முறையில் திருப்பணியை மருது சேர்வைக் காரர்கள் செய்தனர். மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. மலை மேல் ஏறுவதற்குரிய படிகள் மலைச்சரிவில் வெட்டப்பட்டன.
                    புதிய மண்டபங்கள் கட்டப்பட்டன.
                    மேற்கோயில் தக்க முறையில் செப்பனிடப்பட்டு பெரிய அளவில் விரிவாக்கப்பட்டு அழகு படுத்தப ்பட்டது. ஒரே நேரத்தில் பலர் அங்கு இருக்கமுடியும் வண்ணம் அது விளங்கியது.

                    கருவறையின் முன்னிலையில் இரு பெருந்தூண்கள் நிறுவினர். அந்தத் தூண்களில் ஒன்றில் பெரிய மருது சேர்வைக்காரரின் சிலையும் இன்னொன்றில் சின்ன மருது என்னும் மருது பாண்டியன் சேர்வைக்காரரின் சிலையும் விளங்கின. ஆள் உயரத்தைவிட - Larger than life-size சிலைகள்.
                    இருவரும் 'நித்திய சதா சேவை' என்னும் அமைப்பில் சண்முகநாதப் பெருமானை என்றும் தரிசித்து வணங்கிக்கொண்டிருக்கும் பாவனையில் அமைந்த சிலைகள்.
                    கும்பாபிஷேகம் செய்விக்க முடிவு செய்யப்பட்டபோது, அதற்காக சாந்துப் புலவரைக்கொண்டு ஒரு பிரபந்தத்தைப் பாடுவித்தார்கள்.

                    பண்டைய காலத்தில் பாண்டியநாடு இருந்த பொற்காலத்தைப் போன்றதொரு பொற்காலத்தை மீண்டும் உருவாக்கவேண்டும் என்ற பேரவா அவர்களுக்கு எப்போதும் இருந்துவந்தது.
                    பழந்தமிழ் மன்னர்கள் எப்படி ஈரமும் வீரமும் ஈகையும் கொண்டு விளங்கினரோ அதேபோல இவர்களும் விளங்க நினைத்தனர்.
                    பழைய சுதேசி மன்னர்களைக் கொண்டு அந்தப் பொற்காலத்தை கொண்டுவர நினத்த சின்னமருது சேர்வை, மதுரை நாயக்கர்களின் கடைசி அரசியாகிய ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகனும் ஆற்காட்டு நவாபிடம் மதுரை அரசைப் பறிகொடுத்திருந்தவரும் ஆகிய விஜயகுமார திருமலை நாயக்கருக்கு அடைக்கலம் கொடுத்து 'வெள்ளிக்குரிச்சி' என்னும் ஊரில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
                    மருதிருவரின் ஆஸ்தானத்தில் இருபத்தேழு புலவர்கள் இருந்தனர்.

                    அவர்களில் முக்கியமானவர் சாந்துப்புலவர் என்னும் இளவயது மேதை.
                    சாந்துப் புலவர் ஒரே நாளில் 'மயூரகிரிக் கோவை' என்னும் நானூறு பாடல்கள் கொண்ட பிரபந்தத்தை பாடினார். மலையின் மீது ஏற ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள தோகையடி விநாயகர் சன்னிதியில் அது பாடப்பட்டு அரங்கேற்றம் பெற்றது. அதற்காக சிறப்பு மானியத்தையும் சேர்வைக்காரர்கள் வழங்கினர்.

                    பல ஊர்களை அவர்கள் சீரமைத்துள்ளனர். மிக அழகிய சிற்றூர்களை செப்பமாக மருது பாண்டியர் அமைத்திருந்தார்.

                    அவற்றில் ஒன்று, 'அரண்மனைச் சிறுவயல்' என்னும் ஊர். அதன் அமைப்பை மருது பாண்டியரைக் காணவந்த கிழக்கிந்தியக் கும்பினி கர்னல் வெல்ஷ் தம்முடைய 'Military Reminiscences' என்னும் நூலில் மிகவும்  சிலாகித்துப் பாராட்டி எழுதியுள்ளார்.

                    பெரிய மருது சேர்வைக்காரர் ஆட்சிக்குரியவராகக் கருதப்பட்டார். ஆனால் சின்ன மருது பாண்டியர்தான் சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்தையெல்லாம் கவனித்துக் கொண்டவர். பெரிய மருது சேர்வைக்குத் தெரியாமலேயே பாஞ்சாலங்குரிச்சியின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கியதும் அவர்தான்.    
                    அவருடைய அரண்மனை, அரண்மனை சிறுவயலில் இருந்தது. அதனையே தம்முடைய தலைமையகமாக மருது பாண்டியர் கொண்டிருந்தார்.

                    மருதிருவரின் கோட்பாடுகளின்படி குன்றக்குடியையும் பெரிதும் சீரமைத்தனர்.
                    வீதிகள் செவ்வையாக நாற்சதுரமாக அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முனங்கிலுமிருந்து நான்கு திக்குகளிலும் வெளியூர் செல்லும் சாலைகள் இணையுமாறு அமைத்தார்கள். ஊருக்கு நடுவிலேயே சோலைகள் இருந்தன.

                    தடாகங்களைச் செப்பனிட்டனர்.
                    தங்கள் பெயரால் ஒரு பெரிய குளத்தை வெட்டினர்.
                    'மருதாபுரி' என்னும் பெயரில் இன்றும் அது இருக்கிறது.
                    ஊருக்குள்ளும் ஊரைச் சுற்றியும் ஆயிரக்கணக்கில் தென்னை மரங்களை நடுவித்தனர். பல பழமரங்களும் நடப்பட்டன.

                    இவ்வாறு குன்றக்குடி மேன்மையும் சிறப்பும் பெற்று விளங்கியது.

திருக்குன்றக்குடி 2

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி


 குன்றக்குடி ஸ்ரீவல்லப கணபதி 
                    அப்போது சிவகங்கைச் சீமையில் மருது பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்திருந்த சமயம். 1780-ஆம் ஆண்டிற்கும் 1790-க்கும் இடைப்பட்ட காலம்.   
                    இந்த இடத்தில் ஒரு சிறிய விளக்கம்.......
                    விஜயநகரப் பேரரசு காலத்தில் ராயர் அட்மினிஸ்ட்ரேஷன் அந்தப் பேரரசை மண்டங்களாகவும் நாயக்கத் தானங்களாகவும் சீமைகளாகவும் பாளையங்களாகவும் நாடு, ஊர், கிராமம், பட்டி என்றும் வகுத்திருந்தது. 
                    மண்டலத்தை ஆள்பவர் மண்டலேசுவரர். இவர் கவர்னர் மாதிரி. இவருக்கு மேலே ஒருவர். அவர் மஹா மண்டலேசுவரர். அவருக்கும் மேலே ஒருவர். அவர்தான் ராயர். அவருக்கும் மேலே விரூபாக்ஷர் அல்லது திருப்பதி வேங்கடாசலபதி அல்லது ஹஸரா ராமர்.

                    மண்டலேசுவரருக்குக் கீழே நாயக்கர். அப்புறம் பாளையப்பட்டு அது இது..........

                    சிவகங்கைச் சீமை என்பது சேதுபதி மன்னரால் தம்முடைய மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கு சேதுநாட்டிலிருந்து பிரித்து மஞ்சள் காணியாகக் கொடுக்கப்பட்ட நாடு. நாலுகோட்டை மறவர் குடியைச் சேர்ந்த சசிவர்ணத் தேவரும் அவருடைய வாரிசுகளும் அதை ஆண்டுவந்தனர். அந்தக் குடியில் வந்த மன்னர் முத்துவடுகநாதர் பிரிட்டிஷ்காரர்களுடன் ஏற்பட்ட போரில் இறந்தார். அதன்பின்னர் சிவகங்கைச் சீமை பல குழப்பங்களுக்கு ஆளாகியது. பின்னர் மைசூர்ப் படையின் உதவியுடன் மறவர் படையைத் திரட்டிக்கொண்டு வந்து மருது சகோதரர்கள் சிவகங்கையைப் பிடித்துக்கொண்டனர். பழைய ராணி வேலு நாச்சியாரை மறுமணம்
செய்துகொண்ட பெரியமருது சேர்வைக்காரர் அவருடைய பிரதிநிதியாக - காரியத்துக் - நாட்டை ஆண்டுவந்தார். மருது சேர்வைக்காரர்கள் நாட்டைச் சிறந்த நிலைக்குக் கொண்டுவந்தனர்.
                    பெரிய மருது சேர்வைக்காரருக்கு ஒரு முறை முதுகில் ராஜபிளவை ஏற்பட்டது.

                    மிகவும் கஷ்டப்பட்டார். நாட்கள் அதிகமாக அதிகமாக நோயும் வேதனையும் அதிகரித்தன.
                    பிளவை என்பது Carbuncle எனப்படும் கட்டி. Carbuncle என்பது Abscess எனப்படும் கட்டிவகையிலேயே பெரியது. பல abscess கட்டிகள் ஒன்று சேர்ந்து கார்பங்க்கலாக விளங்கும். Infection-ஆல்தான் இந்த விவகாரங்களெல்லாம் ஏற்படும். அதில் எந்த மாதிரியான வகையறா கிருமி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து அந்தக் கட்டியின் Virulence எனப்படும் வீரியம் விளங்கும்.

                    ராஜபிளவை என்பது Multiple Carbuncle. கார்பங்க்கலிலேயே சிக்கலானது. Diabetes சம்பந்தம் பெரும்பாலுமிருக்கும்.

                    அவருடைய ஆஸ்தானப்புலவர் சாந்துப்புலவர். மிகவும் சிறு வயசு. முருகனின் திருவருள் பெற்றவர்.

                    அவர் ஒரு யோசனை சொன்னார்.

                    "யாராவது முருகனின் அடியார் ஒருவரைக் கூட்டிவரச் செய்து குன்றக்குடி முருகனை நினைத்து விபூதி போடச் செய்தால் நோய் நீங்கும். நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு குன்றக்குடி முருகன் குலதெய்வம். ஆகவே ஆட்களை அனுப்பி வெளியில் முதலில் தென்படும் முதல் செட்டியாரை அழைத்துவந்து பிளவையில் விபூதி போடச் செய்யுங்கள். சரியாகிவிடும்", என்றார்.

                    உடனேயே சேர்வைக்காரர் தம் ஆட்களை அனுப்பி, கண்ணில் தென்படும் முதல் செட்டியாரை அழைத்துவரும்படி சொன்னார்.

                    அவர்கள் சென்ற திக்கில் சிறிது தூரத்திலேயே காடப்ப செட்டியார் என்பவர் வியாபார நிமித்தமாக எதிர்த்தாற்போல வந்துகொண்டிருந்தார்.

                    சேவகர்கள் அவரை அப்படியே உடனேயே அழைத்துக்கொண்டு வந்தனர்.

                    பயந்துபோய் உடன் வந்த செட்டியாரிடம் சேர்வைக்காரர் விபரத்தைச் சொல்லி விபூதி போடச் சொன்னார்
                    அரண்டு போயிருந்த காடப்ப செட்டியார் வழக்கத்துக்கும் அதிகமாக, தேவைக்கும் அதிகமாகக் குன்றக்குடி முருகனை வேண்டிக்கொண்டு பிளவையில் திருநீறு இட்டார்.

                    அவர் அவ்வளவு ஆழமாக முருகனை வேண்டிக்கொள்வதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்தன.

                    அன்று இரவு சேர்வைக்காரர் தூங்கும்போது கனவுபோல ஒரு காட்சி தோன்றியது. கனவா நனவா என்ற இரண்டுமில்லாத நிலை. ஏதோ ஒருவகை அரிதுயில்............. Twilight Sleep-பில் Twilight Zone-னில் சஞ்சாரம்.

                    ஒரு இளம் துறவி கையில் மயில் இறகுடன் வந்து ராஜபிளவையை அமுக்கிவிட்டு, சலத்தையெல்லாம் பிதுக்கியெடுத்து, பிளவையின் வாய்ப்பாட்டில் திருநீறு வைத்து அழுத்திவிட்டு, மயில் இறகால் தடவிக் கொடுத்தது போன்ற காட்சி.
                    காலையில் எழுந்தவுடன் ராஜபிளவை உடைந்திருந்தது; வற்றியும் இருந்தது; வீக்கம் ஏதும் அறவேயில்லை; வலியும் கொஞ்சமும் இல்லை.

                    காடப்ப செட்டியாரை அழைத்து விபரத்தைச் சொல்லி அவருக்கு அவருடைய சொந்த ஊராகிய நேமம் என்னும் நியமத்தில் மானியங்கள்விட்டு, அவரைத் தம்முடைய 'அண்ணன்' என்று கொண்டாடி, அவ்வாறே அழைத்து எப்போதும் தம்முடன் இருக்கச் செய்துகொண்டார்.

                    சாந்துப்புலவரின் ஆலோசனைப்படி குன்றக்குடி கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ய விருப்பங்கொண்டார்.

திருக்குன்றக்குடி 1

பாகம் 1
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி


குன்றக்குடி

                    குன்றக்குடி என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள முருகன்   ஸ்தலங்களில் ஒன்று. திருப்புத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையின்மீது அது இருக்கிறது. மதுரையிலிருந்து 80 கீலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதன் மிக அருகில் - சுமார் ஐந்து கீலோமீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி இருக்கிறது. இந்த வட்டாரத்தில் மிகப்புராதனமான கோயில்களும் ஊர்களும் உண்டு.
                    குன்றக்குடி என்னும் பெயரால் விளங்கும் ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் குன்றக்குடி. குன்றக்குடி குன்றுக்கு 'மயில் மலை' என்றும் 'மயூரகிரி', 'சிகண்டிமலை'  என்றும் பெயர்கள் உண்டு.  சிகண்டி என்பது மயிலையும் குறிக்கும்.
                    அந்தக் குன்றின் உச்சியில் கோட்டை போன்ற அமைப்புடன் பாதுகாப்பாக விளங்குவது குன்றக்குடி ஸ்ரீஷண்முகநாதன் ஆலயம். வள்ளி தேவசேனா சமேதரராக ஆறுதிருமாமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் பெற்று விளங்கும் திருக்கோலத்தில் இறைவன் தம் திருத்தேவியர்களுடன் எழுந்தருளியிருக்கின்றனர்.
                    'தேனாறு' என்னும் ஆற்றால் வளம்பெற்ற புராதனமான ஊர்.

                    குன்றக்குடி மிகவும் தொன்மையானதோர் ஊர்.

                    பழங்காலத்தில் அது 'தேனாற்றுப் போக்கு திருகுன்றக்குடி' என்ற பெயர் பெற்றிருந்தது. குன்றக்குடி குன்றின் அடிவாரத்தில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது.
                    அந்த மலையின்மீது சமணர்களின் கற்படுக்கைகள் இருக்கின்றன. பிராம்மி எழுத்துக்களால் ஆன கல்வெட்டும் உண்டு. இவை சங்க காலத்தைச் சேர்ந்தவை.
                    குன்றின் அடிவாரத்தில் உள்ள குடைவரைக் கோயிலை தேனாற்றீசர் அல்லது தேனாற்றீஸ்வரர் கோயில் என்று அழைப்பார்கள். இதில் சில அழகிய சிற்பங்கள் உண்டு. இந்தக் கோயில் ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில். அதற்கும் முன்பே இங்கு சிவன் கோயில் இருந்திருக்கலாம்.

                    தேனாற்றீஸ்வரமுடைய நாயனார் என்று அக்கோயிலின் குடிகொண்டுள்ள சிவபெருமான் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறார். இப்போது அது நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமான கோயிலாக இருக்கிறது. அங்குதான் ஒரு மிகக் கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஜாதி வித்தியாசம் ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்று சொல்கிறார்கள். சொல்லளவில்மட்டும்தான். உண்மை நிலை?

                    'திருக்குன்றக்குடி' என்னும்போது அது பாடல்பெற்ற ஸ்தலமாகத்தான் இருக்கவேண்டும். பிற்காலத்தில் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
                    ஆனால் அதற்கும் முற்காலத்தில் அது ஏதாவது தேவாரம் பெற்ற ஸ்தலமாக இருந்திருக்கக்கூடும். 'திரு' என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

                    பாண்டிய நாடு முழுமைக்கும் பதினான்கே பதினான்கு பாடல் பெற்ற தலங்கள்மட்டும்தான் இருக்கின்றன என்பது சற்று யோசிக்கவேண்டிய விஷயம்.
                    தில்லையில் கூத்தனாக விளங்கும் தென்பாண்டிநாட்டான் அவ்வாறு விட்டிருப்பானா என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

                    பதினாறாயிரம், நாற்பதாயிரம் என்று பாடப்பட்ட தேவாரப் பாடல்களில் வெறும் மூவாயிரம், ஆயிரம் பாடல்கள் மட்டுமே எஞ்சின; மற்றவை அழிந்துவிட்டன என்று சொல்லப்பட்டிருப்பதையும் கருத்தில் வலுவாக இருத்திக் கொள்ளவேண்டும்.
                    பல ஸ்தலங்கள் பாடப்பட்டு அவற்றிற்குரிய பாடல்கள் மறைந்திருக்கலாம்.
                    நியமம் என்னும் நாட்டுப்பிரிவில் திருக்குன்றக்குடி இருந்தது. பழங்காலத்தில் ஒரு நாட்டை மண்டலம், வளநாடு, நாடு, ஊர், நகரம், பட்டினம், கிராமம் என்று பிரிவுகளாகவும் உட்பிரிவுகளாகவும் பிரித்திருந்தார்கள். நிர்வாகம், பாதுகாப்பு, வரிவிதிப்பு, நில அளவை போன்ற காரியங்களுக்காக அவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன.
                    குன்றக்குடி பாண்டிமண்டலத்திலுள்ள கேரளசிங்கவளநாட்டின் உட்பிரிவாகிய கான நாட்டிலுள்ள தேனாற்றுப்போக்கு-நியமம் நாட்டில் இருந்தது. நியமத்தை காங்கேயன் என்னும் சிற்றரசர் பரம்பரை ஆண்டுவந்தது. கங்கை நதிக்கரையிலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த காராளர் குடியைச் சேர்ந்தவர்கள் அந்த பரம்பரையினர்.
                    கேரளசிங்க வளநாடு, கான நாடு, கோனாடு முதலியவை அனைத்தும் இப்போது செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இருக்கின்றன. சிவகங்கைச் சீமை, புதுக்கோட்டைச் சீமை ஆகியவற்றில் செட்டிநாடு விளங்குகிறது. குன்றக்குடி சிவகங்கைச் சீமையைச் சேர்ந்ததுதான்.
                    நாட்டுப் பிரிவுகளும் அவற்றின் பெயர்களும் எல்லைகளும் பரப்பளவுகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
                    மிகவும் வளமுடன் இருந்துவந்த குன்றக்குடி இருநூற்றைம்பது  ஆண்டுகளுக்கு முன்னர் க்ஷ£ணித்த நிலையை அடைந்தது.
   
                    அதன் பின்னர் மருது சேர்வைக்காரர்களால் அது மிகவும் பசுமையும் வளமும் கொண்ட இடமாக மாறியது.
                    அதற்கு ஓர் உண்மையான வரலாற்றுக் கதையைச் சொல்ல வேண்டும்.

                    சொல்கிறேன்........

Wednesday 3 August 2011

தூசு தட்டப்படும் தா.கிருஷ்ணன் வழக்கு. கருணாநிதி விசாரிக்கப்படுவாரா?

கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாலையில் வாக்கிங் சென்ற தா.கிருட்டிணன், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். மு.க.அழகிரி உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது போலீஸ். தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கின் போக்கு திசை மாறியதால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியது அ.தி.மு.க. அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 13 நபர்களையும் நிரபராதிகளாக்கி, விடுதலை செய்தது சித்தூர் நீதிமன்றம். இதை எதிர்த்து தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்!’ என வாக்குறுதி கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ''தா.கி. வழக்கு மீண்டும் உயிர்பெறும்'' என்கிறார்கள் மதுரையில்! 

'உன்னை வீழ்த்தியவர்கள் இன்று தெய்வத்தின் தண்டனை​யால் வீழ்ந்துவிட்டார்கள். அம்மா ஆட்சியில் உண்மைக் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை உறுதி!’ என மதுரையில் அ.தி.மு.க. தொண்டர்கள், தா.கி-யின் புகைப்படத்துடன் மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்.
மே 20-ம் தேதி தா.கிருட்டிணனுக்கு எட்டாம் ஆண்டு நினைவு தினம். இதற்காக மதுரையில் அகமுடையார் இளைஞர் பேரவையினர் நடத்திய தா.கிருட்டிணன் படத் திறப்பு நிகழ்ச்சியிலும் அனல் பறந்தது.
மூவேந்தர் பண்பாட்டுக் கழகத் தலைவர் பரங்குன்றம், ''தா.கி. கொலை வழக்கை சரியானபடி நடத்தவில்லை. அதனால், எல்லோரும் விடுதலையாகிவிட்டார்கள். அப்படி என்றால், தா.கி-யை யார்தான் கொன்னது? நாவரசு கொலை வழக்கில் அப்பீலுக்குப் போன அரசு, தா.கி. கொலை வழக்கில் ஏன் அப்பீலுக்குப் போகவில்லை?'' என்றார் காட்டமாக.

தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, அவர் கொலையுண்டுகிடந்த இடத்தில் ஜூன் 10-ம் தேதி அகமுடையார் அமைப்புகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய அகமுடையார் இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் ஜெயமணி, ''விதி வலியதுன்னு சொல்வாங்க.
எட்டு வருஷத்துக்கு முந்தி இதே தேதியில்தான் தா.கி-யாரை வெட்டிக் கொன்றார்கள். இப்போது அதே தேதியில், கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைகளுக்கு. அது மாதிரி தா.கி-க்குக் கருணாநிதி செய்த கொடுமைக்கு, இப்போது அவர் மகள் கம்பி எண்ணுகிறார்!'' என்றார்.


தேவர் பொலிட் பீரோ உறுப்பினர் அரப்பா பேசுகையில், ''துக்கம் கேட்கக்கூட தா.கி. வீட்டுக்கு கருணாநிதி வரவில்லை. கொலையைக் கண்டித்தோ, இரங்கல் தெரிவித்தோ... பொதுக் குழுத் தீர்மானம்கூட போடவில்லை. அதனால்தான், தா.கி. கொலையின் பின்னணியில் கருணாநிதியும் இருக்கிறார் என்று சொல்கிறோம்.
அவருக்கு இந்தக் கொலையின் ரகசியங்கள் நன்றாகவே தெரியும். அதனால், போலீஸ் மறு விசாரணையை அவரிடம் இருந்து தொடங்க வேண்டும். இப்போது ஸ்பெக்ட்ரம் சதியில் கனிமொழி எப்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ, அதுபோல தா.கி. கொலை வழக்கில் கருணாநிதி மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும்!'' என்றார்.


இந்த வழக்குபற்றி பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு வரும்  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ''மகனைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார். இன்றைய தமிழக அரசு முறையீடு செய்தால், நீதிமன்றம், மறு விசாரணைக்கும் அப்பீலுக்கும் கட்டாயம் அனுமதி கொடுக்கும். இந்த வழக்கில் இருந்து விடுதலையான சிலர், அப்ரூவராக மாறத் தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது.
எனவே மறு விசாரணை நடத்தினால்,  அச்சுறுத்தலுக்குப் பயந்து பிறழ் சாட்சியம் அளித்தவர்கள், இப்போது மனசாட்சிப்படி உண்மையைச் சொல்வார்கள். இந்த வழக்கு அப்பீலுக்கு உகந்தது இல்லை என்று ஆந்திர அரசு வழக்கறிஞர் சொன்னதாகச் சொல்கிறார் கருணாநிதி. அவரிடம் யார், எப்போது கருத்துக் கேட்டார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நான் கேட்டதற்கு, கடைசி வரை கருணாநிதி அரசு பதில் சொல்லவே இல்லை!
மேலும் இந்த வழக்கில் தா.கி. எழுதிய கடிதங்கள் உள்பட முக்கியமான ஆவணங்களை போலீஸ் மறைத்துவிட்டது. தா.கி-யின் மனைவியை கடைசி வரை நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவைக்கவில்லை. தா.கி-யின் தம்பி ராமையா, இவர் மகன் நெடுஞ்செழியன் ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்ததன் ரகசியம் என்ன? தா.கி-யின் இன்னொரு தம்பிக்கு தி.மு.க. அரசில் முக்கியப் பதவி கொடுத்தது ஏன் என்பதையும் இன்றைய அரசு விசாரிக்க வேண்டும்!'' என்றார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடதடக்கப்போகிறது தா.கி. வழக்கு!

வரலாற்றைச் சொல் ! தலைமுறையை உருவாக்கு !!

மருது பாண்டியர் வீர வணக்கம்

Monday 18 July 2011

அகமுடையார் குல மங்கலங்கிழார்

  வடவெல்லைத் தமிழ் முனிவர் மங்கலங்கிழார்



Mangalangkizar

தமிழகத்தின் வடபகுதியில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, எளிமையாக வாழ்ந்து, தமிழைக் கசடறக் கற்றுத் தமிழ் வளரத் தாம் வாழ்ந்து, தம் வாழ்நாளில் பெரும் பகுதியைத் தமிழுக்காகவே ஈந்த பெருமைக்குரியவர் "வடவெல்லைத் தமிழ் முனிவர்" என்றும் "தமிழ்ப் பெரியார்" என்றும் போற்றப்படும் மங்கலங்கிழார். இவர் தமிழுக்கும், தமிழருக்கும் செய்த தொண்டு போற்றுதற்குரியது. "தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை" என்ற பாரதிதாசனின் வாக்கிற்கிணங்க தொண்டின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் மங்கலங்கிழார். 



கல்வியே தெரியாத பாமர மக்களுக்குச் சிறந்த கல்வி அளித்து, அவர்களைச் சிறந்த புலவர்களாக்கிய இவர் தொண்டினை எண்ணுந்தோறும் என்னுள்ளத்தே அழுக்காறு ஏன் சுரக்காது?


யான் நூல்கள் யாத்தலிலும் மேடையில் பேசுவதிலுமே என் அறிவைச் செலவிட்டேன். ஆனால் கிழாரவர்கள் பல மணிமணியான புலவர்களைத் தயாரித்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவர் மூலமும் அவர்தம் பாரம்பரியம் நூற்றுக்கணக்கில் பல்கும் என்பதில் ஜயமில்லை. என் தொண்டினைவிடக் கிழாரின் தொண்டு சிறந்தது, என தமிழ்த் தென்றல் திரு.வி.க. தம் "சுயசரிதை"யில் எழுதியுள்ளார்.


வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் என்னும் பெற்றோருக்கு 1895ல் மகவாய்ப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் குப்பன். பின்னாளில் குப்புசாமி என்றே அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக்கல்வி பயின்றார். குடும்பச் சூழலின் காரணமாக கல்வியைப் பாதியிலேயே இழந்தார்.

கல்வியைத் தொடர முடியாத நிலையை எண்ணி, பல நாள்கள் வருந்தினார் மங்கலங்கிழார். அந்நிலையில் சென்னையில் டி.என்.சேஷாசலம் ஐயர் என்ற வழக்கறிஞர் தமிழ் மொழியின்பால் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு தமிழ் மொழியின் இலக்கண - இலக்கியங்களைப் பாமரர்க்கும் மாணவர்க்கும் போதித்து வந்தார். இச்செய்தியை அறிந்து மங்கலங்கிழாரும் ஐயரிடம் மாணவராய்ச் சேர்ந்தார்.
"படிப்பவர் அனைவரும் வேலைக்காகப் படிக்கின்றனர்; தேர்வுக்காக வகுப்புகளில் ஒருசில தமிழ்ச் செய்யுள்களைப் படித்து அத்துடன் தமிழை மறந்து ஒதுக்கிவிடுகின்றனர்; ஏழை மக்கள் எதுவுமே படிப்பதில்லை; தாம் கற்ற கல்வி பிறர்க்கும் பயனுடையதாய் இருத்தல் வேண்டும். அதைப் பாமரர்க்கும் பரப்ப வேண்டும்," என்ற கொள்கையைக் கொண்டிருந்த ஐயரின் கொள்கை உறுதிப்பாடு மங்கலங்கிழாருக்கும் ஒருமித்த கருத்தாக இருந்தது. இதனால் இருவரும் சென்னையில் இரவு நேரப்பள்ளி ஒன்றை அமைத்து அதன் மூலம் தமிழ் மொழியைப் பரப்பி வந்தனர்.

மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் "கலா நிலையம்" என்ற இலக்கிய இதழ் உருவானது. தொடர்ந்து இதழ் வெளிவர தடை ஏற்பட்டதால், இந்நிலையைப் போக்க கலா நிலையம் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அவ்வாறு நடந்த நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார். தொடர்ந்து இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது என்றாலும் அவரது இலக்கியப்பணி நின்றுவிடவில்லை. பள்ளி இளைஞர்கள் பலரை ஒன்று சேர்த்துத் தமிழ்ப் பண்டிதர்களாக உருவாக்கினார்.
"இலக்கணப்புலி" என்றழைக்கப்பட்ட கா.ர.கோவிந்தராச முதலியாரிடம் இலக்கண - இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

1922ல், திருவள்ளூரைச் சேர்ந்த ஐயாசாமி - அங்கம்மாள் தம்பதியரின் மகளான கமலம்மாளை மணந்தார். அதன் பின்னர் தச்சுத் தொழில் செய்துகொண்டே விடுமுறை நாள்களிலும், இரவு நேரங்களிலும் பாடங்களைப் படிப்பதிலும், கேட்பதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலுமே காலங்கழித்து வந்தார். கா.ர.கோவிந்தராச முதலியார் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார்.
"செக்கிழுத்த செம்மல்" வ.உ.சி.யுடன் நட்பு கொண்டு, அவருடன் இணைந்து திருக்குறளில் நன்கு தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு சைவ, வைணவ நூல்களையெல்லாம் ஆராய்ந்து தெளிவு பெற்றார்.
வேதாந்தத் துறையில் சிறந்து விளங்கிய வடிவேல் செட்டியாரிடம் வேதாந்தம் கற்றுத் தெளிந்தார். அதன்பிறகு புளியமங்கலம் கிராமத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தி வந்தார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார். வேதாந்தம் கற்ற அறிவினால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் ஞான உபதேசத்தால் மீண்டும் சொந்த ஊரான புளியமங்கலத்திற்கே வந்து சேர்ந்தார்.
ஏழைக்கு எழுத்தறிவித்தல் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த அறம் என்பதை உணர்ந்து தெளிந்தார். அதை தன் வாழ்வில் நிகழ்த்திக் காட்ட முடிவு செய்து, குருவராயப்பேட்டை என்ற ஊரில் உள்ள மக்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்தி வந்தார். பிறகு ஊர், ஊராகச் சென்று மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். 1941ம் ஆண்டு குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு "அறநெறித் தமிழ்க் கழகம்" என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. இந்த அமைப்பின் தலைவராக மங்கலங்கிழார் திகழ்ந்தார். இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர்.

இக்கழகத்தின் முதல் மாநாடு 1946ம் ஆண்டு குருவராயப்பேட்டையில் பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு.வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. வசதியும், தேர்ச்சியும் உள்ள மாணவர்களைப், புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.
ஏ.ச.சுப்பிரமணியம், ஏ.ச.தியாகராசன் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் திறந்து வைத்தார். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர்.
அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.
"வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர் மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்" என்று சிலம்புச் செல்வர் மா.பொ.சி. புகழ்ந்துள்ளார்.
 

  • தவளமலைச் சுரங்கம்
    தமிழ்ப் பொழில்
    சிறுவர் சிறுகதைகள்
    வடவெல்லை
    தமிழ்நாடும் வடவெல்லையும்
    சகலகலாவல்லிமாலை - விளக்க உரை
    நளவெண்பா - விளக்க உரை
    இலக்கண விளக்கம்
    இலக்கண வினா - விடை
    நன்னூல் உரை மற்றும்
    தனிக் கட்டுரைகள்

போன்றவை மங்கலங்கிழார் எழுதிய அரிய நூல்களாகும்.

சித்தூர் மாவட்ட தமிழ்ப் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்பதற்காக காந்திய வழியில் அறப்போராட்டம் நிகழ்த்தி சிறை சென்றார்.

"தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் அவர்களின் தன்னலங் கருதாது பணிபல புரிந்து தமிழுக்கும் தமிழர்க்கும் பாடுபட்டு உழைத்த சான்றோர், அவர்தம் நினைவைப் போற்றுதல் தமிழர்க்குக் கடமையாகும்" என்று டாக்டர் மு.வ. புகழ்ந்துள்ளார்.

1953ம் ஆண்டு ஆகஸ்டு 31ம் நாள் மாமனிதர் மங்கலங்கழார் இயற்கை எய்தினார். தம் வாழ்வின் இறுதி மூச்சுவரை தமிழுக்காகவும், தமிழரின் நலனுக்காகவும் தன்னலங்கருதாது தொண்டு செய்த மங்கலங்கிழார் என்றுமே போற்றி நினைவு கூரத்தக்கவர்.

எட்டுக்கும் மேற்பட்ட ஊர்களில் மங்கலங்கிழார் பெயரில்

  • தொடக்கப்பள்ளி
    தெரு
    இலக்கிய மன்றம்
    நூல் நிலையம்
    உருவச்சிலை
    அறக்கட்டளை
    நற்பணி மன்றம்
    பூங்கா
    மாளிகை

போன்றவை அமைக்கப்பட்டிருந்தாலும் அவர் பிறந்த ஊரான புளியமங்கலத்தில் அவருக்கு எந்த அடையாளமும் கிடையாது. அங்கு இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு அவரது பெயரிட்டு வழங்க ஆவன செய்தால், அவருக்கும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும் என்பதில் ஐயமில்லை.

1985 - சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகள்

 

1985 இல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளில், பிற்படுத்த பட்டோர் பிரிவில் "அகமுடையார்" இனத்தினர், மொத்த தமிழக மக்கள் தொகையில் 5.0 % இடம்பிடித்து, மூன்றாம் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

Tuesday 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 20

மருது சகோதரர்களின் ஆக்க நிலையான அரசியல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க, மற்றொன்று கூட்டமைப்புகளை அவர்கள் பல்வேறு கூட்டமைப்புகளை கூட்டிணைவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகும். கட்டபொம்மன் தலைமையிலான திருநெல்வேலி கூட்டிணைவு விருப்பாச்சிப்பாளைய மன்னர் கோபால நாயக்கர் தலைமையிலான திண்டுக்கல் கூட்டிணைவு, கேரள வர்மன் தலைமையில் அமைந்த மலபார்க் கூட்டிணைவு, துந்தாஜிவாத் தலைமையிலமைந்த மராட்டியக் கூட்டிணைவு, கானிஜகான் தலைமையிலமைந்த கோயம்புத்தூர் கூட்டிணைவு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்தனர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஒருமுகப்படுத்தினர். ஆனால் துரதிஷ்டமான இக்கூட்டிணைவுகள் ஒருங்கிணைந்து செயலாற்றத் தொடங்கும் முன்னரே சில நசுக்கப்பட்டன. சில ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் கலைக்கப்பட்டன. இருப்பினும் மருது சகோதரர்கள் தங்களின் நோக்கத்திலிருந்து சிறிதும் மனம் தளரவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களுக்குள்ள நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினர். ஆங்கிலேய மேலாண்மை எதிர்ப்புப் போர் அவர்களின் துணிவு, அரசியல் செயல்திறம் ஆகியவற்றிற்குச் சான்று பகர்வனவாகத் திகழ்கின்றன.
கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருது சகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி தம் சொந்தக் கருத்தைக் கூறுகிறார். சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்று சிறுவயலில் வெ ள்ளை மருதுவின் அரண்மனையில் விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரது எதிரியாக மீண்டும் வருவேன் என்பதை நான் சிறிதளவுகூட அறியாததேயாகும். பாஞ்சாலங்குறிச்சி வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தியுள்ளனர். ஆனால் எனக்குத் தெரிந்த அளவில் மருதுவிற்கு தீர்த்து வைக்க முடியாதபடி எந்தக் குறையுமில்லை. அவர் செய்யும் இந்த கலவரம் தேவையில்லாததாகும். மருதுவை மதிக்கும் அளவிற்கு ஊமத்துரையை நான் மதிக்க முடியாது என இதிலிருந்து நாம் அறிவது மருதுவிற்கு ஐரோப்பிய நண்பர்கள் இருந்தனர் என்பது உண்மைதான்.
ஆனால் அதன் காரணமாகவே அவர்கள் ஆங்கிலேயரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டனர் எனக் கருத இயலாது.தமது பாளையத்தில் மட்டுமின்றித் தமிழகத்திலிருந்தே இன்னும் ஆழமாகக் குறிப்பிட வேண்டுமனால் இந்தியாவிலிருந்தே ஆங்கில மேலாண்மையை முற்றிலும் அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் அவர்களில் ஒவ்வொரு செயற்பாடும் இருந்தது. மருதுவின் திருச்சி அறிக்கை உன்னிப்பாக கவனித்தால் அதன் உண்மை தெ ள்ளத்தெளிவாக நமக்குப் புரியும். திப்புசுல்தான் மறைவுக்குப் பிறகு சின்னப் பாண்டியரி;ன் விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எறிந்தது. ஆங்கில மேலாண்மையை அடியோடு அகற்ற வேண்டுவதன் இன்றியமையாமையை அவ்வறிக்கையில் தெளிவாகச் சுட்டியிருந்தனர். எனவே ஜேம்ஸ் வேல்ஷ் குறிப்பிடுவதைப் போல் மருது சகோதரர்களுக்கு எவ்விதக் குறையும் இருந்ததில்லை என்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேண்டுமாயின் ஒரு வேளை பொருந்தலாம். ஆனால் பொது வாழ்க்கையில் - குறிப்பாக அரசியல் வாழ்க்கையில் பொருந்தாது.
ஆங்கிலேயரின் தயவில் மருது சகேதாரர்களின் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் அவர்கள் எந்தச் சூழலிலும் தம் சொந்த நலனுக்காக ஆங்கிலேயரை நாடவில்லை. விடுதலை வேட்கையின் பொருட்டே ஆங்கிலேயரை எதிர்த்தனர். எனவே தான் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைத் தங்கள் சொந்த எதிரியாகக் கருதாமல் இந்த நாட்டின் எதிரியாகக் கருதினர். அன்னாளில் இத்தகைய அரசயில் நோக்கும் இலட்சியமும் பாளையத் தலைவர்களில் சிலரிடையே மட்டுமே இருந்தன. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் முன்னிற்பவர்கள் மருது சகோதரர்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை.
ஆங்கிலேயருக்கு எதிரான மருது சகோதரர்களின் கிளர்ச்சி அரசயில் சார்புடையோர் மட்டும் நடத்திய கிளர்ச்சியன்று, அது மக்கள் கிளர்ச்சியுமாகும். ஆங்கிலேயரின் ஆட்சியலும் ஆற்காட்டு நவாப்பின் நடவடிக்கையிலும் மக்கள் வெறுப்படைந்தனர் தடுக்கின்றர் என்பதை அறிந்து மருது சகோதரர்கள் அவர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயரை எதிர்க்கும் மாபெரும் மக்கள் ஆற்றலை உருவாக்கினர். அவர்கள் நடத்திய கிளர்ச்சியில் அனைத்துச் சாதியினரும், அனைத்துத் தொழில்புரிவோரும் கலந்து கொண்டனர். அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் ஐரோப்பிய மேலாண்மையினின்றும் மீட்க வேண்டும் என்றும சின்ன மருது தம் திருச்சி அறிக்கையில் அறிவித்திருந்தார். அதற்கேற்ப மறவர், நாடார், தோட்டியர், கள்ளர், மீனவர் எனப் பல சாதியினர் இக்கிளர்ச்சியில் பங்கேற்றனர். மன்னர்களும், குறுநிலத் தலைவர்களும் ஆட்சிபுரிந்த அக்காலத்தில் இத்தகைய வலுவான மக்கள் முன்னணியை மக்கள் ஆற்றலைத் திரட்டிய மருது சகோதரர்களின் மக்களாட்சி பண்பு சிறப்புக்குரியதாகும்.கிளர்ச்சியுடன் நடந்த போதிலும் அம்முயற்சி தோல்வியடைந்தது.
அதற்குப் பல காரணங்களைக் கூறலாம். 1) புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாதராயத் தொண்டைமானும் தஞ்சாவூர் மன்னரும் ஆங்கிலேயரை அதிகப்படியாக ஆதரித்துப் படையுதவியுள்பட அனைத்து உதவிகளையும் செய்தது. 2) விடுதலைப் போராட்ட வீரர்களிடம் திட்டமிட்ட போர்ப் பயிற்சி இல்லாதது புதிய ரக ஆயுதங்களை கையாளுதுவில் உள்ள தொய்வு. 3) எதிரியின் ஆற்றலை முறியடிக்கத் தகுந்த திட்டத்தைக் கூட்டணியில் வகுக்காதது. 4) அனைத்து கூட்டிணைவுகளும் அந்தந்த இடத்தில் ஒரே காலத்தில் கிளர்ச்சியைச் செய்யாதது. இக்காரணங்களால் ஆங்கிலேயர் கிளர்ச்சிகளை ஒவ்வோரிடமாக நசுக்கினர். இதனால் சிவகங்கைப் பாளையத்திலும் கிளர்ச்சி தோல்வியுற்றது.மருது பாண்டியர்கள் மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்ததற்குப் பொருத்தமான காரணங்கள் எவையுமில்லை. ஆயினும் அவர்கள் சொல்லும் இரு காரணங்களுக்காகப் போர் தொடுத்தனர். 1) கட்டபொம்மு மறைந்த பிறகு குமாரசாமி எனற ஊமைத்துரைக்கு சிவகங்கைப் பாளையத்தில் அடைக்கலம் கொடுத்தது. 2) சிவகங்கையின் உண்மையான குடிவழியை நிலைநிறுத்த விரும்பியது.
மருது சகோதரர்கள் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்தது தவறு என்றால் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு உரிமையுடையவர் ஆற்காட்டு நவாபுமேயன்றி ஆங்கிலேயர் அல்லர். கி.பி. 1792இல் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர் பாளையக்காரரிடம் மேலாண்மை செலுத்தும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஒப்பந்தம் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயரின் மேலாண்மையை நிலைநிறுத்தும் பொருட்டும் அவர்களுக்குள் செய்து கொண்ட தன்னல ஒப்பந்தமேயாகும். பாளையக்காரர்களின் நலன்களை முன்னிறுத்து செய்துகொண்ட ஒப்பந்தமன்று. எனவே அது எவ்வகையிலும் எந்தப் பாளையக்காரரையும் கட்டுப்படுத்தும் தகுதி பெற்றதன்று. இந்த ஒப்பந்தத்தில் ஆற்காட்டாருக்கே பின்பு உடன்பாடு இல்லாமல் போய்விட்டது. ஆயினும் ஆற்காட்டு நவாபுடன் ஆங்கிலேயர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முன்னிறுத்திப் பாளையக்காரர்களை அடக்க முயன்றனர். மருது சகோதரர்களிடமும் இவ்வடக்கு முறையைத்தான் ஆங்கிலேயர்கள் கையாண்டனர்.
ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்ததோ சிவகங்கைப் பாளையத்ததுக்குரிய நேர்குடி வழியினரை மன்னராக அமர்த்ததோ மருது சகோதரர்கள் செய்த குற்றமாயின் அவை தொடர்பாக முறையான விசாரணையை ஆற்காட்டு நவாபுவின் ஒப்புதலில் நடைபெற்றிருக்க வேண்டும. காரணம் முத்துவடுகநாதர் 26-6-1772இல் இறந்த பிறகு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் கழித்து சிவகங்கையை மீட்ட பொழுது மருதுபாண்டியர்கள் அரும்பாடுபட்டு 40,000 பக்கோடே பணத்தைக் கொடுத்து மீட்ட பொழுது இந்த கேள்விகளை எல்லாம் ஆற்காட்டாரும், ஆங்கிலேயரும் ஏன் கௌரி வல்லபரும் கேட்டிருக்க வேண்டும். அப்பொழுது எல்லாம் குடிவழியைக் கேட்காமல் இப்பொழுது கேட்பது மிகவும் வேதனையான நிகழ்வு. மருது சகோதரர்களை கைது செய்த நிலையில் கூட அவர்களை எத்தகைய விசாரணைக்கும் உட்படுத்தவில்லை. விசாரணை நடத்தினால் சட்டப்படி குற்றம் சுமத்த இயலாது என்பதே இதற்குக் காரணம். ஆற்காட்டு நவாபும் புதுக்கோட்டை தொண்டைமானும் மருது சகோதரர்களை அடக்க வேண்டும் என்று ஆங்கிலேயரை வற்புறுத்தியதும், திருநெல்வேலி ஆட்சித் தலைவர் லூசிங்டன் மருது சகோதரர்களின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டதுமாகிய இரு அடிப்படைக் காரணங்களினாலேயே ஆங்கிலக் கம்பெனியார் போர் தொடுத்தனர்.
ஆற்காட்டு நவாபு சிவகங்கையின் வலிமையைக் குறைப்பதற்கு பலமுறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்முயற்சியில் தோல்வியடைந்தார். இதனால் காழ்ப்புணர்வு மேலிட்டு 1786லும் 1788லும் கம்பெனியாருக்கு இரு கடிதங்களை எழுதினர். சிவகங்கையின் மீது படையெடுக்க வேண்டுவதன் முக்கியத்தை அதில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே புதுக்கோட்டைத் தொண்டைமானும் எல்லைத் தகராறு என்பதைக் காரணம் காட்டி 1788லும் 1792லும் இருமுறை சிவகங்கைப் பாளையத்தின் மீது படையெடுத்தார். மருது சகோதரர்களுக்கு சிவகங்கைச் சீமையில் உள்ள மக்கள் செல்வாக்கினால் அவரின் முயற்சி தோல்வியுற்றது. இதனால் அவர் மீது வெறுப்பை வளர்த்திருந்தார். எனவே மருது சகோதரர்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்தது. சிலரது தூண்டுதலினாலும் விருப்பு வெறுப்புகளை நிறைவு செய்யும் பொருட்டே ஆகும். இவையன்றி வேறு ஒரு பொருத்தமான நோக்கம் எதுவுமில்லை. மருது சகோதரர்களின் அரசியல் வளர்ச்சியையும், எழுச்சியையும் கண்டு ஆங்கிலேயர் அச்சமும் பொறாமையும் கொண்டனர். அவர்கள் மருது சகோதரர்களின் குடும்பத்தினருக்கு அளித்த தண்டனையில் அவற்றைத் தணித்துக் கொண்டனர். சின்ன மருதுவின் 15 வயதே நிரமபிய அவரின் மகன் துரைசாமி என்பவர் நீங்கலாக ஆண்கள் அனைவரையும் எந்த இடத்தில் பிடிபடுகிறார்களோ அதே இடத்தில் தூக்கிலிட்டனர். தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் குடும்பத்தில் ஆண்கள் யாருமே மிஞ்சக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்ட ஆங்கிலேயரின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத கறையுடையதாகும். காரணங்களை ஆராயாமல், கிளர்ச்சி செய்தவர்களையே விசாரணை இன்றி தூக்கிலிட்டது நாகரிகமற்ற செயலாகும்.
மருது சகோதரர்கள் விடுதலைப் போரில் தோல்வி அடைந்தனர். உண்மைதான் அவர்கள் அப்போரில் வெற்றி பெற்றிருந்தால் நாளடைவில் எல்லோரையும் போல் அவர்களின் பெயர் இப்பொழுது உள்ள சந்ததியினருக்கு தெரியாமல் அல்லவா போய் இருக்கும். போரில் தோல்வி அடைந்தாலும் அவர்களின் வீரம் செறிந்த இலட்சியமும், குறிக்கோளும் தோல்வியடையவில்லை. அவர்கள் தூக்கிலிடப்பட்டதன் பின்னர் 146 ஆண்டுகள் கழித்தே விடுதலை இலட்சியம் நிறைவேறியது. நாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. இத்தனை ஆண்டுகள் கழித்து அடைந்த விடுதலையை அக்காலத்திலேயே எண்ணினர். எழுச்சியுடன் செயல்பட்டனர். அவர்களின் இன்னுயிர் ஈந்தனர். நாட்டுமக்கள் இவ்வாறு எண்ணிப் பார்க்கும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை அமைந்ததுதான் அவர்களுக்குரிய வரலாற்றுச் சிறப்பு.
மருது சகோதரர்களைப் பற்றி வரலாற்று உரியவைகள் திட்டமிட்டு அனைத்தையும் அழித்தாலும் அவர்கள் அறிவித்த திருச்சி அறிக்கை ஒன்று மட்டும் அவர்களின் இலட்சியத்தை விளக்கப் போதுமானதாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் சில நிகழ்வுகளை பாதுகாத்து வைத்ததினால் ஓர் அளவாயினும் மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவித சுய விளம்பரம் இன்றி உண்மையை உரைப்பனவாக உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பெரும் எதிரிகளாய் விளங்கிய ஐதர் அலி அவர் மகன் திப்புசுல்தான் ஆகியோர்கூட இத்தயை அறிக்கையை வெளியிடவில்லை. உண்மையில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எந்தப் பாளையக்காரரும்(கட்டபொம்மு உள்பட) ஏன்? எந்த இந்திய மன்னரும் இத்தகைய அறிக்கையை துணிச்சலுடன் வெளியிடவில்லை.
இதன் மூலம் தனக்கும், தனது குடிகளுக்கும் பல இன்னல்கள் வரும் என்றும் சின்னப் பாண்டியர் செய்தார் என்றால் என்ன சொல்ல. குறிப்பிடத்தக்க இந்திய வரலாறு ஆவணங்களுள் ஒன்றாக இவ்வறிக்கையைக் கொள்வது பொருத்தமுடையதாகும். ஆங்கில மேலாண்மைக்கு எதிராக இந்திய மண்ணில் எழுந்த எழுத்து வடிவிலான முதல் அறிக்கை இதுவே என்பது வரலாற்றில் நிலை நிறுத்தப்பெறும். இத்தகைய புகழ்மிக்க ஆவணத்தை நிலைநிறுத்தி தங்கள் இன்னுயிரையும் குடும்பத்தினரின் இன்னுயிரையும் பலி பீடத்தில் ஏற்றிக் கொண்ட மருது சகோதரர்களின் தியாகம் வரலாற்றில் என்றும் நின்று நீங்கா இடம் பெறும்.
'
வாழ்க மருதுபாண்டியர்களின் புகழ்
'
ஓங்குக அவர்களின் புகழ்
முற்றும்