Tuesday 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 12

சுபேதார் சுலைமானுக்கு பெரிய மருது கட்டிய சமாதி
பெரிய மருது பாண்டியருக்கு காளையார் கோவிலில் உள்ள காளீஸ்வரருக்கு ஒரு ராஜகோபுரம் பழைய கோபுரத்தைக் காட்டிலும் மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ளதைப் போல் கட்ட வேண்டும் என்ற ஆசை அதற்கான ஆயத்த வேலைகள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கும் போது, அஸ்திவாரம் தோண்டும் போது பிரச்சனைகள், கட்டிடம் கட்ட முடியாமல் நீர் ஊற்று அதிகரித்து கட்டிடம் கட்ட தடைப்பட்டது. அந்த சமயத்தில் சிறிய வயதுடைய ஒரு முகமதியர் பெயர் சுலைமான் பக்கிரி என்பவர் அந்த இடத்திற்கு வந்தார். அவர் யார் தெரியுமா? ஆற்காட்டு நவாப் முகமதலியின் படையில் பணி ஆற்றிய ஒரு தலைசிறந்த வீரன் சுலைமான் காளையார் கோயில் மீது படையெடுக்க சரியான தருணத்தை கணக்கிடுவதற்காகவும், மருதுபாண்டியர்களின் படையின் வலிமையை அறிந்து கொள்ளவும் அங்குள்ள மக்களின் மனநிலையை அறிந்து சரியான நேரத்தில் படையெடுக்க ஆற்காடு நவாப்பால் அனுப்பப்பட்ட ஒற்றன். சந்தர்ப்பம் கிடைக்குமாயின் மருதுபாண்டியரைக் கொலை செய்வதற்குக் கூட சுலைமானுக்கு யோசனை சொல்லப்பட்டதாம். அந்த சமயத்தில் அங்கு வந்த சுலைமான் மருதுபாண்டியருக்கு வணக்கம் சொல்லிவிட்டு அதிகமாக வரும் நீர் ஊற்றை தான் தடுத்துவிடுவதாகச் சொல்கிறான். அதுகேட்டு மன்னர் மருதிருவர் மன மகிழ்ச்சி அடைகிறார்கள். உடனே சுலைமானுக்கு நீர் ஊற்றை அடைக்க தேவையானவற்றை கொடுக்க வேலையாட்களிடம் பணித்தார்.
சுலைமான் பத்து வண்டி அளவு அயிரை மீன்கள் வேண்டும் என்றார். அடுத்த நாள் காளையார் கோயிலுக்கு அருகில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் செய்தி அனுப்பி அயிரை மீன்களையும் அஸ்திவாரம் தோண்டிய நீர் தேக்கிய பகுதிகளில் சுலைமான் ஆற்று மணலுடன் சேர்த்துப் போட்டதால் ஒவ்வொரு மீனும் மணலைகளைக் கவ்விக்கொண்டு நீர் ஊற்றை அடைத்தது. அதன் பின்னர் நீரின் கசிவு ஏற்படாததால் கோபுரம் கட்டும் வேலை சுணக்கம் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்றது. பெரியமருதுவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. சுலைமானிடம் உனக்கு என்ன வேண்டும் என மருதரசன் கேட்டார். அதற்கு சுலைமான் எதுவும் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்த சுலைமான் பல மொழி பேசும் திறமை பெற்றவர். அத்தோடு வானத்தில் பறக்கும் பறவையை குறிதவறாது வேட்டையாடும் கலையை நன்கறிந்தவர். அத்துடன் மல்யுத்தம், சிலம்பு ஆட்டம் கற்றறிந்தவர், மகா புத்திசாலி, அப்படிப்பட்டவரை மருது அவர்கள் தனது அரண்மனையிலேயே அதன் உள்ளே உள்ள குதிரை லாயத்தின் முழுப் பொறுப்பையும் கவனிக்க முழு அதிகாரத்தை சுலைமானுக்கு கொடுத்து கௌரவித்தார். காலப் போக்கில் மருது சகோதரர்களின் உண்மையான உணர்வுகளும் சிறந்த சிந்தனைகளும் அவர்களுக்கு மக்களிடத்தில் அவர்கள் காட்டும் அன்பை நேரில் பார்த்த பொழுது சுபேதார் சுலைமான் மனம் மாறினார். அவர் உளவாளியாக வந்த ஆற்காட்டருக்கு எந்த தகவலும் அனுப்பவில்லை. இப்படிப் பல மாதங்கள் உருண்டோடின. ஒரு நாள் பெரிய மருது சிவகங்கைக்கு அரசு வேலையாக சென்றிருந்தார். சின்ன மருது அவரின் நம்பிக்கைக்கு உரிய கரடிக் கறுத்தானைக் கூட்டிக் கொண்டு காளையார் கோயிலுக்கு சென்றார். (இந்தக் கரடி கறுத்தான் தான் பின்னாளில் பொருளுக்கு ஆசைப்பட்டு பெரிய மருதுபாண்டியரை காட்டிக் கொடுத்தவன்) அங்கு ஒரு வெ ள்ளைப்புறா பறந்து சென்றது. சின்ன மருது தனது வளரியை எடுத்து பறந்து கொண்டிருந்த புறாவை நோக்கி வீசினார்.
குறிதவறாது புறா மீது வளரி தாக்கி, புறா கீழே விழுந்து கொண்டிருந்தது. அது தரையில் விழு முன் சுலையின் புறாவை தனது கையில் பிடித்தார். அதை அருகில் இருந்து பார்த்த சின்ன மருதுவுக்கு ஒரே ஆச்சரியம்! வளரியால் வீழ்த்திய புறாவை இடையிலேயே பிடிப்பவன் தனக்கு அடுத்து இந்த கறுத்தான் ஒருவனே. இந்த வித்தையை சுலைமானுக்கு எப்படித் தெரியும் என்று அப்பொழுது கறுத்தான் சுலைமானின் கையிலிருந்து புறாவைக் கவனித்தான். அதன் கால்களில் ஒரு துண்டுச் சீட்டு இருந்தது. அதை உடனே சின்னமருதுவும் நோக்கினார். அதன் எழுத்து உருது மொழியில் இருந்தது. அதில் ஆற்காட்டான் எப்பொழுது காளையார் கோயிலுக்கு படையெடுத்து வரலாம் என சுலைமானின் யோசனையைக் கேட்டு எழுதி இருந்தது.
இந்தச் செய்தியை படித்தமட்டில் சின்னமருதுவுக்கு கோபம் எல்லை மீறிப் போய்விட்டது. அட ராஜதுரோகி! உன்னை எனது அண்ணன் பெரிய மருது எப்படியெல்லாம் உயர்வாக நடத்துகிறார். அதற்கு நீ காட்டும் நன்றிக் கடனார்? என ஏக வசனத்தில் பேசிக் கொண்டிருந்தார். இது கண்டு சுலைமானுக்கு மிகுந்த மனவேதனை. உடனே மன்னர் அவர்களே! நான் சொல்லும் விளக்கத்தினை தயவுசெய்து செவிமடுத்துக் கேட்கவும், நான் ஒற்றனாய் வந்தது உண்மை. இங்கு உங்களையும், பெரிய மன்னரையும் கண்டவுடன் அவர் ஆட்சியையும், அவர் நாட்டு மக்கள் மீது கொண்ட அன்பை பார்த்த பின்பு, நான் வந்த வேலையை மறந்தேன். அத்தோடு ஆற்காட்டருக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை. அதனால்தான் அவர்கள் எனது நோக்கம் அறிய புறா மூலம் தூதுவிட்டுள்ளனர் என்றார். சின்னமருது எந்த விளக்கத்தையும் கேட்பதாக இல்லை. உடனே அவருக்குத் தெரிந்த கத்திச் சண்டை, குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டில் எப்படியும் சுலைமானின் உயிரைப் போக்க வேண்டும் என முடிவு செய்தார். அதற்கு சுலைமானும் சளைக்காமல் சின்னமருதுவுக்கு சமமாக அவரும் ஈடு கொடுத்து சமாளித்தார். ஆனால் கடைசியில் சின்னமருது அவர்களின் மர்ம அடி (தற்போது சொல்லுகிற குங்பூ) அவரின் நெற்றியில் பட்டு அக்கணமே சுலைமானின் உயிர் பிரிந்தது.
சிவகங்கையில் உள்ள பெரிய மருதுவுக்கு இந்த துயரமான செய்தி கிடைத்தவுடன் மிகவும் மன வேதனைப்பட்டார். மனம் மாறிய சுலைமானை சின்னமருது கொன்றுவிட்டானே என அப்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலையில் அப்படி ஒரு செயலை சின்னமருது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது போலும். தனது உண்மையான ஊழியன் என எண்ணப்பட்ட கரடிக் கறுத்தான் மருதுபாண்டியரைக் காட்டிக் கொடுத்தான். ஆனால் ஒற்றனாய் வந்த சுலைமான மருதுவுக்கு அதரவாக இருந்துள்ளார். இது காலத்தின் கோலம் தானே?பெரியமருதுவின் மனம் அம்மாவீரனுக்கு, அவரின் ஞாபகமாக பட்டரைக் கண்மாய் என்ற ஊரில் ஒரு பெரிய சமாதி ஒன்றைக் கட்டினார். அத்தோடு அவரின் சந்ததியினருக்கு பல நிலன்களைத் தானமாக கொடுத்தாராம். அந்த நினைவிடத்தில் இன்றும் விவசாய காலம் ஆரம்பிக்கும் பொழுதும், பின் அறுவடை நடைபெறும் காலத்திலும் சுபேதார் சுலைமானின் சமாதியில் காணிக்கை செலுத்தி அவரின் நினைவாக எல்லா சமூகத்தினரும் வணங்கிச் செல்வது அங்கு வழக்கமாக கொண்டுள்ளனர். இச்செய்தியை மறைந்த முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் அவர்கள் மருதுபாண்டியர் நினைவு நாளில் சொல்லக் கேட்டது.

No comments:

Post a Comment