Tuesday 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 19

பெரிய மருதுவின் மரண வாக்குமூலம்
என்னுடைய வாரிசுகளைக் கம்பெனியார்களாவது எனக்கு விரோதிகளாவது, யாதோர் இம்சையும் செய்யாமல் இருக்கும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன். முருகன் துiணாயகவும் ஆகாசவாணி பூமாதேவி சாட்சியாகவும் நான் என் கழுத்தில் கயிறு போட்டுக் கொள்கிறேன். மேலே சொன்னபடி நீங்கள் கத்தியைப் போட்டுச் சத்தியம் செய்து கொடுத்ததை நான் நேரில் பார்த்துக் கொண்டேன்.இப்படிக்கு ஒப்பம் பெரிய மருது சேர்வை
ஜெகவீரபாண்டியனார். பாஞ்சாலங்குறிச்சி
வீர சரித்திரம், பகுதி 2 பப 328-331இம்மரணசாசனம் முழுமையாக இடம் பெற்ற பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம், பேராசிரியர் . சஞ்சீவி எழுதிய மருதிருவர் ஆகிய நூல்களில் முழுமையாக உள்ளன. இருப்பினும் பல வரலாற்று ஆசிரியர்கள் இம்மரணசாசனத்தை பாரா பாராவாகப் பகுபபாய்வு செய்ததில் பெரிய பாண்டியரின் வீரம், தியாகம், சகோதர வாஞ்சை இவற்றிற்குச் சாவு மணியடிக்கின்ற சாசனமேயன்றி உண்மையைத் தாங்கிய ஆவணமல்ல, இச்சாசனம் பல இடங்களில் தனக்குத் தானே முரண்படுகிறதாம். எனவே நாமும் மரண சாசனத்தை விளக்கமாகச் சொல்லாமல் அண்ணன் மீ. மனோகரனின் மருதுபாண்டிய மன்னர்கள் என்ற புத்தகத்தின் வாக்கினை நாமும் எடுத்துக் கொள்வோம். (பக்கம் 654-655)
முடிவுரை
சிவகங்கைச் சீமையின் வரலாற்றில் மருதுபாண்டியர்களின் பங்கு தனிச்சிறப்புக்கும், பெருமைக்கும் உரியதாகும். அச்சிறிய பாளையத்தை வரலாற்றுச் சிறப்புக்குரிய இடமாக நிலைநிறுத்திய பெருமை மருதுபாண்டியர்களையே சாரும். அவர்கள் முத்துவடுகநாதரிடம் எளிய பாணியில் பிரதானி தாண்டவராயன் பிள்ளையின் மூலம் சேர்ந்தது முதல் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்படுவது வரை போராட்டத்துக்கிடையிலேயே அவர்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். போராட்டம் வாழ்க்கையின் ஒரு பகுதி நம்மைப் போன்றவருக்கு, ஆனால் அவர்களுக்கு போராட்டமே அவர்களின் வாழ்க்கையாயிற்று. அவர்களின் போர் உயர்ந்த நோக்குடன் வளர்ந்தது. அதன் மூலம் உயர்வு பெற முடிந்தது.மருதுபாண்டியர்களின் வாழ்க்கையின் பெரும்பகுதி நாட்டிற்குத் தொண்டு செய்வதிலேயே கழிந்தது. சிவகங்கையை மீட்ட தொடக்க ஆண்டில் மக்களின் அமைதியான வாழ்வு கருதி ஆங்கிலேயர்க்கும் ஆற்காட்டருக்கும் பெருந்தொகையை வரியாகக் கொடுத்தனர். அதற்காக அவர்கள் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. நாட்டில் அமைதி நிலவிய காலங்களில் ஆக்கப் பணிகளில் தங்கள் கருத்தைச் செலுத்தினர். சிவகங்கைச் சீமையை பல வழிகளிலும் வளமாக்கினர். மத  வேறுபாடின்றி இறைப் பணியாற்றினர். இன வேறுபாடின்றி அறக்கொடைகள் நல்கினர். உழவுத் தொழிலைப் பெருக்கும் பொருட்டு குளங்கள், கண்மாய்கள் வெட்டினர். குடிநீர் தேவையை உணர்ந்து ஊருணிகளை ஏற்படுத்தியும், பாண்டியன் கிணறு என ஊருக்கு ஊரு வெட்டி தண்ணீர் தேவையை சிவகங்கைச் சீமைக்கு ஆற்றிய சிறந்த தொண்டுகளாகும்.மருது சகோதரர்கள் ஆங்கில மேலாண்மையை எதிர்த்துப் போரிட்ட காலங்களில் பரங்கியருக்கு நிகரான எதிரிகளாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு போரிட்டனர். திட்டமிட்டுச் செயலாற்றும் திறத்திலும், எதிரிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சியிலும், புதுவகைப் போர்க் கருவிகளின் பெருக்கத்திலும் சிறந்து விளங்கி ஆங்கிலேயரை 56 நாள்களுக்கு மேல் காளையார்கோயில் போரில் ஈடு கொடுத்து எதிர்த்திருக்கின்றனர். இது அவர்களின் விடுதலை உணர்வுக்கு கிடைத்த பெருமையாகும்.
ஆங்கிலேய மேலாண்மையை எதிர்ப்பதற்கென அமைத்த பல்வேறு கூட்டிணைவுகளின் ஒருங்கிணைப்பாளர்கள் என்ற முறையில் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைவிடவும் திட்டமிட்டுச் செயலாற்றும் திறன் படைத்தவர்களாக விளங்கினர். இருப்பினும் பாழ் செய்யும் உட்பகை மருது சகோதரர்களின் நல்லுணர்வை வலுவிழக்கச் செய்தது. ஆங்கிலக் கூலிப்படையிடம் சிவகங்கை விடுதலைப்படை தோல்வியடைந்தது என்பது வரலாற்று உண்மை. இருப்பினும் வரி கொடாமை, இணக்கமின்மை, ஒத்துழையாமை ஆகிய வழிகளில் ஆங்கில மேலாண்மையை எதிர்க்காமல் அந்நியரிடமிருந்து முற்றிலும் விடுதலை பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போரிட்ட மருது சகோதரர்களின் உள்ளுணர்வு தோல்வியடையவில்லை. அவர்களின் போர் முழக்கம் திருச்சி, ஸ்ரீரங்கம், அறிக்கையும் சிவகங்கைப் பாளையத்துக்கு மட்டுமின்றி, தென்னிந்தியாவில் ஆங்கில மேலாண்மை இருந்த இடங்களுக்கெல்லாம் விடுத்த அறை கூவலாகும்.

No comments:

Post a Comment