Tuesday 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 15

சின்ன மருதுவின் 'ஜம்பூ திவப் பிரகடனம்
தேசிய முக்கியத்தும் வாய்ந்த அந்த பிரகடனம் உயர்ந்த இலட்சியங்களை உள்ளடக்கியது.ஆங்கிலக் கம்பெனியாருக்கு 16-6-1801ஆம் தேதி கிடைக்கப்பெற்றது
1.
இதை யார் பார்த்தாலும் கவனமுடன் படிக்கவும்.
2.
ஜம்பு (நாவல்) தீவிலும் ஜம்பு தீபகற்பத்திலும் வாழுகிற சகல சாதியினருக்கும், நாடுகளுக்கும், பிராமணர்களுக்கும், சத்திரியர்களுக்கும், வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும், முசல்மான்களுக்கும் இந்த அறிவிப்புத் தரப்படுகிறது.
3.
மேன்மை தங்கிய நவாப் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடம் கொடுத்து விதவை போலாகிவிட்டார். ஐரோப்பியர்கள் அவர்களது நம்பிக்கைகளுக்கு மாறாக அவற்றை புறக்கணித்து, இந்த நாட்டை ஏமாற்றித் தமதாக்கிக் கொண்டதுடன், மக்களை நாய்களாகக் கருதி அதிகாரம் செலுத்துகின்றனர். மக்களிடையே ஒற்றுமை இல்லை. நட்பு இல்லை. ஐரோப்பியரின் போலி வேடத்தை அறியாமல் முன்யோசனையின்றி உங்கள் அரசை அவர்களின் காலடியில் வைத்தீர்கள். இந்த இழிபிறவிகளால் ஆளப்படும் இந்நாடுகளின் மக்கள் ஏழைகளானார்கள். அவர்களின் உணவு வெ ள்ளம் (நீர் ஆதாரம்) தான் என்றாயிற்று. அவர்கள் இவ்வாறு இன்னலுறுவது வெளிப்படையாகத் தெரிந்தாலும் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவு இல்லாதவர்களாயுள்ளனர். இப்படி ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதிலும் இதைப் போக்க சாவது எவ்வளவோ மேலானது என்பது உறுதி, அப்படிச் சாவைத் தழுவுகிறவனின் புகழ் சூரிய சந்திரர் உள்ளவும் வாழும். மேன்மை தங்கிய நவாபிற்கு ஆற்காட்டு சுபாவும் மற்றும் விசயமணத் திருமலை நாயக்கருக்கு கர்நாடகமும் தஞ்சாவூரும் முதல் கட்டமாகவும், மற்றவர்களுக்கு மற்ற சீமைகள் அடுத்த கட்டமாகவும், அந்தந்த நாட்டு வளமைகளையும் நெறிகளையும் மீறாமல் திரும்ப அளிக்கப்படும். இனி வருங்காலத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பரம்பரைப் பாத்தியதையே அடையலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஐரோப்பியர் தம் பிழைப்புக்கு மட்டும் நவாப்பின் கீழ் பணிபுரிந்து, இடையீடற்ற உண்மையான மகிழ்ச்சி கொள்ளலாம். ஐரோப்பியர் ஆதிக்கம் ஒழிந்துவிடுமாதலால் இனி (ஐரோப்பியர்) தலையீடற்ற நவாபின் ஆட்சியில் கண்ணீர் சிந்தாத இன்ப வாழ்வு வாழலாம்.

4.
அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளின் பெயர்கூட இல்லாதவாறு ஒழிக்க வேண்டி, அங்கங்கு பாளையங்களிலும், ஊர்களிலும் உள்ள ஒவ்வொருவரும் உங்களுக்குள் ஒன்றுபட்டு, ஆயுதமேந்திப் புறப்படுமாறு வேண்டப்படுகிறது. அப்போதுதான் ஏழைகளும், இல்லாதோரும் விமோசனம் பெறுவார்கள். எச்சில் வாழ்க்கையை விரும்பும் நாய்களைப் போல ஈனப் பிறவிகளின் வார்த்தைகளுக்கு அடிபணிகிற எவரேனும் இருப்பின் அவர்கள் கருவறுக்கப்பட வேண்டும்.
இந்த இழிபிறவிகள் (ஐரோப்பியர்) எவ்வளவு ஒன்றுபட்டும் தந்திர தன்மை கொண்டும் இந்த நாட்டை அடிமைப்படுத்திவிட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே வயல்களிலோ அல்லது வேறு துறைகளிலோ அரசின் பொது (சிவில்) அலுவலகங்களிலோ, இராணுவத்திலோ எங்கும் வேலை பார்ப்பவராயினும், பிராமணர்கள், சத்திரியோரில் மீசையுள்ள எவரும் இந்த இழி பிறவிகளின் இராணுவச் சிப்பாய்கள் எவராயிருப்பினும் ஆயுதம் ஏந்தத் தெரிந்த எவரும் தங்கள் துணிச்சலைக் காட்ட, இதோ உங்களுக்கு முதல் வாய்ப்பு வந்துவிட்டது. அந்த வாய்ப்பு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று கீழே விவரிக்கப்படுகிறது.

5.
எங்கெல்லாம் அந்த இழி பிறவிகளைப் பார்க்க நேர்கிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். வேருடன் களைப்படும் வரை அவ்வாறு செயல்படுங்கள். இந்த இழி பிறவிகளிடம் பணிபுரிவோர் எவரும் (அவர்கள் மட்டும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டு) சொர்க்கத்தை அடைந்துவிடப் போவதில்லை என்பதை நானறிவேன். இதனைக் கருத்தூன்றுங்கள் நிதானமாய் யோசியுங்கள். இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளாதவனின் மீசை, என் மறைவிடத்து மயிருக்குச் சமம்! அவன் உண்ணும் உணவு சத்தொழிந்து சுணுயற்றுப் போகட்டும். அவனது மனைவியும் குழந்தைகளும் இன்னொருத்தானுக்காகட்டும். அணு அவ்வழி பிறவிகளுக்குப் பிறந்தவைகளாக்க கருதப்படட்டும். எனவே ஐரோப்பியரால் இன்னும் இரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர்! இதைப் படிக்க சேர்கிற, இதன் சாராம்சத்தைக் கேட்க நேர்கிற எவரும் இதனை நண்பர்களுக்கு எழுதி எவ்வளவு பகிரங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு பகிரங்கப்படுத்தி எழுதி ஒட்டச் செய்வீர். அதைப் பெறுகிற நண்பர்களும் அதே மாதிரி (அதைப் படியெடுத்து) வெளியிடச் செய்து பிரச்சாரம் செய்திடச் செய்வீர்! மேலே சொன்னபடி எழுதவும். எழுதியதைச் சுற்றுக்கு விடவும் மறுக்கிறவர்கள கங்கை கரையில் காராம் பசுவைக் கொல்கிற பாவத்திற்கும், நரகத்திற்குப் போகிற, வேறு பாபங்களுக்கும  ஆன குற்றங்களைச் செய்தவர்களாகக் கருதப்படுவார்கள். இதை அனுசரிக்காத முசல்மான்கள் பன்றியின் இரத்தத்தைக் குடித்தவர்களாகக் கருதப்படுவார்கள்.இங்ஙனம்,பேரரசர்களின் ஊழியன்
ஐரோப்பிய இழி பிறவிகளை ஒருபோதும் மன்னிக்காத
-
மருது பாண்டியன் -
பெறுவோர்
சீரங்கத்தில் வாழும் அர்ச்சகர்கள், ஆன்றோர், அனைத்து பொது மக்கள் அனைவருக்கும் மருதுபாண்டியன் மேலே கண்டவர்களின் பாதங்களில் வீழ்ந்து விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால் அரண்களையும், மண்கோட்டைகளையும், ஆலயங்களையும், தொழுகையிடங்களையும் கட்டியவர்கள் நம் மன்னர்களாயிருக்க, அந்த மன்னர்களும், மக்களும் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதே இந்த இழி நிலையை மாற்ற ஏதாவது செய்ய வேண்டாமா? எவ்வளவு பெரிய ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள் இந்தப் பணி வென்றிட உங்கள் நல்லாதரவை நல்குங்கள்! மேற்கண்டவை திருவரங்கம் அரங்கநாதர் கோயிலின் மதியில் ஒட்டப்பட்ட பிரகனத்தில் கண்ட வாசகங்களின் நகலாகும். ஆதாரம் -மருது பாண்டிய மன்னர்கள் மீ. மனோகரன் - சிவகங்கை. விடுதலைப் புரட்சியின் போர் தொடங்கிவிட்டது
பாஞ்சாலக்குறிச்சிக் கோட்டை நொறுக்கப்பட்டு ஊமைத்துரை சிவகங்கைச் சீமைக்குள் அடைக்கலம் புகுந்து அடுத்த ஐந்தாம் நாளே 28-5-1801இல் மேஜர் ஷெப்பர்டு தலைமையில் ஆங்கிலேயரின் படை நாகலாபுரத்திற்கு வந்து சேர்ந்தது. இவர்களோடு மேஜர் கிரே தலைமையில் ஓர் ஆங்கிலயப் படையும் நாகலாபுரம் வந்து சோந்தது.
29-5-1801
ஆம் நாளில் மருதுபாண்டியர்களின் படை இராமநாதபுரம் நாட்டிற்குச் சொந்தமான கமுதி கோட்டையை மயிலப்பன் சேர்வை படைகளுடன் சேர்ந்து கைப்பற்றியது விபரம் அறிந்த ஆங்கிலேயர்களின் படை கமுதிக் கோட்டையை நோக்கி நாகலாபுரமும் விரைந்தது. பலத்தையெல்லாம் பயன்படுத்தியும் மருதுபாண்டியர்களின் படை தோல்வியைத் தழுவியது. கோட்டைக்குப் படைகளை மட்டும் வைத்துவிட்டு ஆங்கிலேயர்களின் படை திருப்புவனத்தை நோக்கி திரும்பியது. திருப்புவனத்தில் வைத்து மருதுபாண்டியர்களின் படையும் ஆங்கிலேயர்களின் படையும் படுபயங்கரமாக மோதிக் கொண்டன. திருப்புவனத்தில் ஆங்கிலப் படைகள் படுதோல்வி அடைந்து பின் வாங்கின.

1801
ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை ஆங்கிலேயர்களின் படை திருப்பவுனத்தை விட்டுத் திருப்பாச்சேத்திக்குக் கடக்கப்படாது. மருதுபாண்டியர்களின் வீரர்கள் பெரும்வீரத்தோடு வெ ள்ளையர்களை எதிர்ப்பட்ட வழியெல்லாம் தாக்கி அழித்தனர். அந்த நாளின் இரவில் திருப்பாச்சேத்தி கண்மாய்க்கரை உச்சியில் மருதுபடைகள் தீவட்டியை வைத்துக் கொண்டு பல பேர் போருக்கு நிற்பதைப் போன்ற எண்ணத்தை உண்டாக்கி ஆங்கிலேயர்களுக்கு கலக்கத்தை உண்டு பண்ணினார்களாம். அப்போரில் மேஜர் கிரே தன் உயிரை இழந்தார். மருது பாண்டியர்களின் வீரர்கள் எழுபது பேர் கொல்லப்பட்டனர்.
கடும் போர் புரிந்த மருது சகோதரர்களின் படை வீரர்கள் ஆங்கிலேயப் படை வீரர்களைப் புறமுதுகுகாட்டி ஓடச் செய்தனர். லெப்டினட் பார்மின்டனும், லெப்டினட் ஸ்டூவர்ட்டும் படுகாயப்பட்டனர். வழியில் துணைக்கு வந்த படைகளையும் மருதுபாண்டியர்களின் எழுநூறு விடுதலை வீரர்கள் எதிர்த்து அழித்தார்கள். 10-6-1801இல் மானாமதுரைக்கும் பார்த்திபனூருக்கும் இடையில் நடந்த போரில் பத்து ஐரோப்பியர்கள் இறந்தனர். ஆங்கிலேயருக்கு உறுதுணையாக வந்த கூலிப்படைகளில் நூறு பேர் மரணமடைந்தனர். இது மருது பாண்டியர்களின் படையினருக்குக் கிடைத்த மகத்தான இரண்டாவது வெற்றியாகும்.ஆங்கிலேயர்களின் படையினர் பார்த்திபனூர் புறப்பட்டுப் பரமக்குடிக்கு வந்து விடுதலைப் படைகளைப் பற்றி பொது மக்களிடம் விசாரித்தனர். மக்கள் தவறான திசையைக் காட்டினர். பல்வேறு தாக்குதலுக்கும், சங்கடங்களுக்கும் ஆளான ஆங்கிலப்படை ஒரு வழியாக 14-6-1801இல் இராமநாதபுரத்தை அடைந்தது. மக்களை எதிர்நோக்கி இருந்த சண்டை பற்றியும் விடுதலைப் படைகளைப் பற்றியும் கர்னல் மார்ட்டிங் இடம் தெரிவித்தனர். இராமநாதபுரத்தில் மேலும் ஆறு நாட்கள் தங்கி விருந்துண்டு, அதன்பின் ஜூன் 22 அன்று இராமநாதபுரத்திலிருந்து நாற்பது மைல் தூரத்தில் இருந்த கமுதிக் கோட்டையில் முகாமிட்டனர். பழமனேரி நதிக்கு கீழ்ப்புறங்கரையில் அமைந்திருந்த பலமான கற்கோட்டையாகும். இது இரண்டு சுவர்களாலான, ஒன்று சிறிது உயரமானது, வட்ட வடிவமானது. ஒவ்வொன்றிலும் ஆறு பாதுகாப்புச் சுவர்கள் உள்ளனவாம். அவற்றிற்கிடையே கற்குளம் ஒன்று இருந்தது. மேல் சுவரில் தானியக் கிடங்கும் இருந்தனவாம். மூன்றாவது படைப் பிரிவிலிருந்து ஒரு கம்பெனியும், இருநூறு வேலையாட்களும் அபரிமிதமான வெடி மருந்துகளும், மற்ற பொருள்களுடன் லெட்டினன்ட் கிரீவ்ஸ் படைஅதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தாராம். இவ்விபரத்தினை கர்னல் ஜேம்ஸ்வேல்ஸ்-இன் போர் கால நினைவுகள் மூலம் அவர் கைப்பட எழுதியதின் மூலம் கிடைக்கப் பெற்றது. மேலும் வரும் விபரங்கள் அனைத்தும் அவர் மூலம் நமக்கு கிடைக்கப் பெற்றன.

24-7-1801
இல் திருப்பத்தூருக்கு அருகில் உள்ள திருக்கோஷ்டியூரை ஆங்கிலப்படைகள் அடைந்தன. இங்கு கர்னல் இன்ஸ் என்பவரின் தலைமையில் ஒரு படை வந்து சேர்ந்து கொண்டது.நத்தத்தில் நடந்த போரில் காப்டன் ஹட்லண்டும், லெப்டினன்ட் பிர்த்தும் படுகாயம் அடைந்தனர். சில ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.புதுக்கோட்டைத் தொண்டைமான் அனுப்பிய கூலிப்படைகளும் படையெடுப்பில் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக கலந்து கொண்டன. மருதுபாண்டியர்களின் படைவீரர்கள் முதன் முதலாக எதிரிப்படைகளை நோக்கி தீப்பந்தங்களையும், சிறிய அளவிலான ராக்கெட்டுகளையும் (திப்பு சுல்தானிடம் இருந்து பெறப் பெற்ற) பயன்படுத்தினார்கள்.
28-7-1801
இல் ஆங்கிலேயர்களின் தலைமையில் திரண்ட ஏழாயிரம் படை வீரர்கள் ஒக்கூரைக் கைப்பற்றினார்கள். அந்த ஊரைத் தீக்கிரையாக்கினர்.

No comments:

Post a Comment